காவல்துறை வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய தாக்குதல் சம்பவத்தில் மதுரையைச் சேர்ந்த ரவுடி கொட்டுராஜா இன்று என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த கொட்டு ராஜா?
மதுரையில் உறவினர்களுக்குள் கடந்த 22 ஆண்டுகளாக கேங் வார் ஒன்று நடந்து வருகிறது. இந்த கேங் வாரில் 21 உயிர்கள் இதுவரை பலியாகி இருக்கின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த உறவினர்கள் வீ.கே.குருசாமி – ராஜபாண்டி. இவர்கள் சிறு வயதாக இருக்கும் போது இவர்களது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்துவிட்டது. குருசாமியும் ராஜபாண்டியும் வளர்ந்ததும் அரசியிலில் அடியெடுத்து வைத்தனர். திமுகவின் மண்டல தலைவர் ஆனார் குருசாமி. அதிமுகவின் மண்டல தலைவர் ஆனார் ராஜபாண்டி.

என்னதான் இருவரும் உறவினர் என்றாலும் அரசியல் இருவருக்குள்ளும் தீராப்பகையை ஏற்படுத்தி விட்டது. 2003ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது சுவர்களில் போஸ்டர் ஒட்டுவதில் குருசாமி தரப்புக்கும் ராஜபாண்டி தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ராஜபாண்டியின் அண்ணன் காளிமுத்துவின் மகன் சின்ன முனீஷ், குருசாமி ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்படுகிறார். இதற்கு பழி தீர்க்க சின்ன முனீஷின் தம்பி காளிமுத்து என்கிற வெள்ளை காளி கிளம்பினார் .
கூலிப்படை ஏவி கொலை செய்யாமல் உறவினர்கள் இரு தரப்பினருமே நேரடியாக களத்தில் இறங்கி மாறி மாறி ஒருவரை ஒருவர் கொன்று வருகின்றனர். கடந்த 22 ஆண்டுகளில் இதனால் 21 உயிர்கள் பறி போயிருக்கின்றன.

இந்த கேங் வாரின் தீவிரத்தை கருத்தில் கொண்டு கடந்த 2011ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் ராஜபாண்டி. அதன் பின்னர் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். நிலைமையை சமாளிக்க திமுகவின் மண்டல தலைவர் பொறுப்பில் இருந்து விலகி, மதுரையே வேண்டாம் என்று பெங்களூருவில் வசித்து வந்தார். வெள்ளைக்காளி கும்பல் அங்கேயும் துரத்திச்சென்று ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்தவரை 70 இடங்களில் வெட்டிச் சாய்த்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தவரை பழி வாங்கி துடித்துக் கொண்டிருக்கிறது வெள்ளைக்காளி தரப்பு.
வெள்ளைக்காளியின் தாய்மாமா ராஜபாண்டி. கொட்டுராஜாவின் தாய்மாமா குருசாமி. ராஜபாண்டியின் மகன்கள் 2 பேரை கொட்டுராஜா கொலை செய்துவிட்டதால் குருசாமி மற்றும் அவரது மகன் மணியை கொலை செய்ய துடித்துக் கொண்டிருக்கிறது வெள்ளைக்காளி கோஷ்டி.

கொட்டுராஜா என்கவுன்டர் ஏன்?
40 வயதாகும் வெள்ளைக்காளி மீது மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட 20 வழக்குகள் உள்ளன. இதற்காக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவரை கடந்த 23ம் தேதி அன்று திண்டுக்கல்லில் நடந்த கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் வெள்ளைக்காளியை 24ம் தேதி அன்று சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
பெரம்பலூர் அருகே எறையூர் பகுதியில் சாப்பிடுவதற்காக ஓட்டலுக்கு சென்றனர். அப்போது 15 பேர் கொண்ட கும்பல், காளி மீது நாட்டுவெடிகுண்டை வீசினர். இதில் அவர் உயிர் தப்பினார். காவலர் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சதைச்சிதைவு ஏற்பட்டதில் தற்போதும் அவர் மருத்துவ உயர் சிகிச்சையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.

காவல்துறையின் விசாரணையில், வெள்ளைக்காளியை கொல்ல கொட்டுராஜா நிகழ்த்திய சம்பவம் என தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் தேனி அருகே தலைமறைவாக இருப்பது தெரியவந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மங்களம்பேடு அழைத்து வந்து அங்கே கொட்டு ராஜா பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். அப்போது கொட்டுராஜா தப்ப முயன்றதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
கொட்டுராஜா மீது மூன்று கொலை வழக்குகள் உள்பட 7 வழக்குகள் உள்ளன.



