விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடந்த முத்துக்குமார் நினைவேந்தல் கருத்தரங்கில் தொல்.திருமாவளவன் பேசியபோது, முத்துக்குமார் மரண சாசனத்தை கையில் வைத்துக்கொண்டு அதன்படி ஏன் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்பது குறித்து மனம் திறந்தார். தன் உடலை உடனே இறுதி அடக்கம் செய்யாமல் உடலை ஆயுதமாக வைத்துக்கொண்டு போராட வேண்டும் என்று மரண சாசனம் இருந்தும் அதை தான் செய்தால் அதை ஏற்றுக்கொள்ளும் நிலைமை அன்றைக்கு இல்லை என்பது குறித்து மனம் திறந்தார்.
’’மருத்துவர் ராமதாசும் நானும் சேர்ந்து ‘தமிழ் பாதுகாப்பு இயக்கம்’ நடத்தினோம். தேர்தல் காரணத்தால் நானும் அவரும் பிரியும் நிலை ஏற்பட்டது. பிரிந்தபோது தமிழ் உணர்வாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் யார் பின்னால் சென்றார்கள்? உடனே, மருத்துவர் ராமதாஸ் பின்னால் போய்விட்டார்கள். யாரும் திருமாவளவன் பின்னால் வரவில்லை.

எது தடுத்தது? ஏன் திருமாவளவன் பின்னால் அவர்களால் வர முடியவில்லை? ராமதாஸ் ஒரு இயக்கத் தலைவராக வந்த போது அவரை தோளில் தூக்கி கொண்டாடியவர்கள், பெரியாரிய வாதிகளும், மார்க்சிய வாதிகளும் , மார்க்சிய லெனினிய வாதிகளும் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்றாக, ஒரு தலைவர் வந்துவிட்டார், ஒரு புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம். இனி திமுக வேண்டாம், இனி அதிமுக வேண்டாம் என்று அவரை தோளில் தூக்கி கொண்டாடியவர்கள் யாராவது திருமாவளவன் எமர்ஜ் ஆகி வந்த காலத்தில் பக்கத்தில் வந்து யாராவது ஆறுதல் சொல்லி இருப்பார்களா? ஆதரவாக நின்றிருப்பார்களா? ஒரு வார்த்தை சொல்லி ஊக்கப்படுத்தி இருப்பார்களா? திருமாவளவனுக்கு யாராவது துணை நின்றிருப்பார்களா? யாரும் கிடையாது.
அவரை தலைவர் தலைவர் என்றும், தமிழினத் தலைவர் என்றும், தமிழினக் காவலர் என்றெல்லாம் தூக்கி கொண்டாடிய ஒரு நபர் கூட thiruma பின்னால் நிற்கவில்லை. முட்டி மோதி சொந்தக்காலில் நின்று கரணம் போட்டுத்தான் திருமாவளவன் இன்றைக்கு இந்த இடத்தில் வந்து நிற்கிறான்.

கருத்தியல் அடிப்படையில் தமிழ் மண்ணில் தோழர் ரவிக்குமார் சில கட்டுரைகள் எழுதியபோது எவ்வளவு ஆவேசம் தமிழ் மண்ணில் எழுந்தது. திருமாவளவனையே நொறுக்குவதற்கான முயற்சி நடந்தது. இந்த அரசியலையே நொறுக்குவதற்கான முயற்சி நடந்தது. எனக்கு எதிராக தலித் இயக்கங்களை எல்லாம் தூண்டிவிட்டு என்னை ஒருமையில் பேச வைத்தார்கள்.
பேசவைக்க எனக்கு யாரும் மேடை போட்டுத்தரவில்லை. நானே வலிந்து.. வலிந்து.. வலிந்து… நான் ஒரு பெரியாரியவாதி, நான் ஒரு அம்பேத்கரியவாதி, நான் ஒரு மார்க்சிய வாதி என்று கம்யூனிஸ்டுகளோடு உறவாடினேன். பெரியார் இயக்கங்களோடு உறவாடினேன். நானே வலிந்து வலிந்து அவர்களின் அலுவலகங்களுக்கு தேடிப்போனேன். நான் ஏறாத அலுவலகங்கள் இல்லை, நான் சந்திக்காத தலைவர்கள் இல்லை.
நான் இப்படிப்பட்டவன் என்று நானே பல மேடைகளில் வலிந்து பேசி காட்டிக்கொள்கிற நிலை அன்றைக்கு இருந்தது. என்னை இந்த தமிழ்ச்சமூகம் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளவில்லை.

பெரியார் பாசறையில் வளந்தவர்கள் இன்றைக்கு பெரியார் ஒரு மண் என்று சொல்கிறார்கள். அவரை அம்பலப்படுத்துவதற்கான முயற்சிகள் இங்கே பெரிய அளவில் என்ன நடந்திருக்கிறது?அவரை ஏற்றுக்கொண்ட திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் யார் திருமாவளவன் பின்னால் வந்து நின்றார்கள்?
பேசத்தெரியாதா? எழுதத்தெரியாதா?சிந்திக்கத் தெரியாதா?போராடத் தெரியாதா? திட்டமிடத் தெரியாதா? என்ன அடிப்படையில் திருமாளவன் குறைந்து போனான்? ஒரு தலைவராக என்னை இந்த சமூகம் ஏற்க தயங்குகிறது. ஏன் திருமாவளவனை ஏற்பதற்கு இவ்வளவு தயக்கம்?’’



