பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களைக் கடத்தும் முயற்சி சமீபகாலமாகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சர்வதேச எல்லைப் பகுதியில் பிப்ரவரி 13-ம் தேதி நள்ளிரவில் ஒரு அதிரடிச் சம்பவம் அரங்கேறியது. எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பி.எஸ்.எஃப் (BSF) வீரர்கள், அதிகாலை நேரத்தில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒரு Drone இந்திய எல்லைக்குள் ஊடுருவி வருவதைக் கண்டறிந்தனர். அந்த ட்ரோன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சில மர்மப் பொட்டலங்களை வீசிவிட்டு, மின்னல் வேகத்தில் மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே மறைந்தது.

உடனடியாக அந்தப் பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திய ராணுவத்தினர், விடியற்காலையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது புதர்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் நிறப் பொட்டலங்களைக் கைப்பற்றினர். அந்தப் பொட்டலங்களைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் சுமார் 8 கிலோ எடை கொண்ட உயர்தர ‘ஹெராயின்’ (Heroin) போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சர்வதேசச் சந்தையில் இதன் மதிப்பு சுமார் 40 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த கடத்தல் கும்பல், இந்தியாவிற்குள் இருக்கும் தங்களது கூட்டாளிகளுக்கு இந்த போதைப்பொருளைக் கொண்டு சேர்ப்பதற்காக நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜம்மு எல்லை முழுவதும் பாதுகாப்புப் படையினர் ‘High Alert’ நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லைக் கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் தெரிந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாகப் பனிமூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தைப் பயன்படுத்தி இத்தகைய கடத்தல்கள் நடத்தப்படுவதால், நவீன ரேடார் கருவிகள் மற்றும் இரவு நேரக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பி.எஸ்.எஃப் வீரர்கள் தற்போது தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 40 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் யாருக்காக அனுப்பப்பட்டது மற்றும் இதன் பின்னணியில் உள்ள உள்ளூர் தொடர்புகள் யார் என்பது குறித்து மத்திய உளவு அமைப்புகளுடன் இணைந்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.(Online Tamil News)


