நூறு வயதைக் கடந்த பொதுவுடைமைப் போராளி மூத்த தோழர் நல்லகண்ணு உடல்நலக் குறைவால், மருத்துவ சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 25 அன்று மறைவெய்தினார். அரசியலில் மாற்றுக் கருத்துகள் கொண்டவர்கள்-களத்தில் எதிர்த்து நிற்கும் கட்சியினரும் கூட அவருக்கு நேரிலும் அறிக்கையிலுமாக இரங்கல் தெரிவித்திருப்பது தமிழ்நாட்டு அரசியல் பண்பாட்டை மட்டுமல்ல, தோழர் நல்லகண்ணு தன்னுடைய 85 ஆண்டுகால பொதுவாழ்வை எந்தளவுக்கு வாழ்ந்திருக்கிறார் என்பதையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
சிவப்புக்கொடி கட்சியின் கருப்பு காந்தி என்று தோழர் நல்லகண்ணுவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது மாணவராக இருந்த நல்லகண்ணு, சக மாணவர்களைத் திரட்டி அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீரர். கம்யூனிசம் எனப்படும் பொதுவுடைமைக் கொள்கையின் தாக்கமும், அந்தக் கொள்கையை முன்வைத்து சோவியத் யூனியனில் (ரஷ்யா) நடந்த வெற்றிகரமான புரட்சியும் பல இளைஞர்களை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணையவைத்தன. இளைஞரான நல்லகண்ணுவும் அதில் ஒருவர்.
முதலாளி-தொழிலாளி, ஏழை-பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வில்லாத சமுதாயம் அமைந்திட இந்தியாவிலும் கம்யூனிச வழி புரட்சித் தேவை என்பதே அந்த இளைஞர்களின் எண்ணம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும், சுதந்திர இந்தியாவிலும் கம்யூனிஸ்ட்டுகள் மீது அரசாங்கம் அடக்குமுறையை ஏவியது. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட வரலாறும் உண்டு. அதனால், கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களும், தொண்டர்களும் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். போலீசார் அவர்களைத் தேடித் தேடி வேட்டையாடினர்.
தலைமறைவு வாழ்க்கைக் காலத்தில் போலீசிடம் சிக்கினார் நல்லகண்ணு. கட்சியின் தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டும், ஆயுதப் புரட்சி தொடர்பான நடவடிக்கைகளுக்காகவும் அவரைக் கொடூரமாக சித்திரவதை செய்தார்கள். அவருடைய மீசை முடியை ஒவ்வொன்றாகப் பிடுங்கினார்கள். பிடுங்கப்பட்ட இடத்தில் சிகரெட் நெருப்பை வைத்துத் தீய்த்தார்கள். கடைசிவரை, தோழர் நல்லகண்ணு முகத்தில் மீசை இல்லாததற்கு அதுதான் காரணம். சிறைவாசத்தை எதிர்கொண்டார் நல்லகண்ணு. எல்லாமும் மக்களின் உரிமைக்கானப் போராட்டத்தினால்தான்.
சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கைதிகள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடியதால் 1950ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். 22 பேர் உயிர் பறிபோனது. அந்த செய்தி வெளியே வரக்கூடாது என்பதில் அரசாங்கம் கெடுபிடியாக இருந்தது. பார்த்துக்கொண்டது. உயிர் பற்றிக் கவலைப்படாமல் கொள்கைப் பற்றுடன் விளங்கிய தோழர் நல்லகண்ணு போன்றவர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி பின்னர் தேர்தல் அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கியது.
விவசாயிகள், தொழிலாளர்கள், அடித்தட்டு மக்களின் வாழ்வுரிமையே கம்யூனிஸ்ட்டுகளின் முதன்மை நோக்கமாகும். அதனால் ஆடம்பர அரசியலைத் தவிர்த்து, எளிமையாகவே வாழ்க்கை நடத்தினார்கள். கட்சியின் முழு நேர ஊழியர்கள் மிக சொற்ப ஊதியத்தில் உணவு, உடை போன்றவற்றைத் திட்டமிட்டுக் கொண்டு, ஊர் ஊராகப் பயணித்து கொள்கையைப் பரப்பினார்கள். கட்சியின் சார்பில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தங்களுக்கு அரசாங்கம் தரும் ஊதியத்தை கட்சிக்கு கொடுத்து விடவேண்டும். கட்சி வழக்கமாக வழங்கும் குறைந்த ஊதியத்தைத்தான் குடும்பத்திற்கு செலவிட வேண்டும்.
எம்.பி.யாகவோ, எம்.எல்.ஏ.வாகவோ தோழர் நல்லகண்ணு பதவி வகித்ததில்லை. ஒரே ஒரு முறை மட்டும் தேர்தலில் போட்டியிட்டு, அதிலும் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதுபற்றிக்கூட அவர் கவலைப்படவில்லை. வழக்கம்போல கட்சிப் பணிகளை மேற்கொண்டார். எந்த ஊருக்கு செல்கிறாரோ, அங்கே கட்சி அலுலவகம் இருந்தால் அங்கே தங்குவார். அல்லது கட்சி நிர்வாகிகள் வீட்டில் தங்குவார். காலையில் குளிப்பதற்கு முன் தன் துணிகளை துவைத்து காயப் போட்டுவிட்டு, குளித்தபிறகு மாற்று உடை உடுத்திக்கொண்டு கட்சிப் பணிகளுக்கு செல்வார். மறுநாள் குளிப்பதற்கு முன், காயப்போட்ட உடையை எடுத்து வைத்து, கட்டியிருந்த உடையைத் துவைத்துப் போடுவார்.
கம்யூனிஸ்ட் கட்சியில் அப்போது எல்லாருமே நல்லகண்ணு போலத்தான் இருந்தார்கள். மக்களின் உரிமைக்கானப் போராட்டத்தில் வசதிவாய்ப்புகளை எதிர்பாராமல் பொதுத்தொண்டு ஆற்ற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அதனால்தான், தனக்கு கட்சி திரட்டித்தந்த 1 கோடி நிதியை கட்சிக்கே வழங்கினார், தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த தகைசால் தமிழர் விருதுக்கான பரிசுத் தொகை, அத்துடன் கூடுதலாக 5000 ரூபாய் சேர்த்து முதலமைச்சரின் நிதிக்கு நல்லகண்ணு வழங்கினார். கடைசி வரை வாடகை வீட்டில்தான் வசித்தார்.
தென்மாவட்ட சாதிக்கலவரத்தில் தனது மாமனார் கொலை செய்யப்ப்டடபோதும், தனிப்பட்ட இழப்பைத் தாண்டி, பொதுச்சமூகத்தில் எந்தப் பக்கம் நிற்கவேண்டுமோ அந்தப் பக்கமே நின்றார் தோழர் நல்லகண்ணு.கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வின் அடையாளம் என்பது எளிமையல்ல, கொள்கை வலிமை.
அவருடைய மறைவுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவிக்கலாம். தோழர் நல்லகண்ணு போல அரசியலில் நேர்மையுடன் வாழ்வதற்கு கொள்கைப்பற்றுடன் சுயநலமில்லாத பொதுவாழ்க்கைக்கான மன உறுதி வேண்டும்.(Online Tamil news)



