மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் இன்று பெரும் சரிவைச் சந்தித்தன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களும், அதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதல்களும் உலகளவில் பெரும் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதன் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,048.34 புள்ளிகள் சரிந்து 80,238.85 என்ற அளவில் நிறைவடைந்தது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 312.95 புள்ளிகள் சரிந்து 24,865.70 புள்ளிகளுடன் வர்த்தகத்தை முடித்துக் கொண்டது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போதே சென்செக்ஸ் சுமார் 2,743 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வர்த்தகத்தின் இடையில் சற்று முன்னேற்றம் தெரிந்தாலும், இறுதி நேரத்தில் 1.29 சதவீத சரிவுடனேயே வர்த்தகம் முடிந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, எஸ்பிஐ, டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் டாடா ஸ்டீல் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் இன்று கடும் சரிவைச் சந்தித்தன. இருப்பினும், பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடிசி போன்ற ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் மட்டும் ஓரளவிற்கு ஏற்றம் கண்டன. இந்தத் திடீர் சரிவு பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)


