தமிழ்நாடு முழுவதும் பரபரப்பையும் பதற்றத்தையும் உருவாக்கியது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே வேடநத்தம் ஊரைச் சேர்ந்த மாணவி திடீரெனக் காணாமல் போன விவகாரம். உடல் சிதைந்து உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே நெஞ்சம் பதறியது. தமிழ்நாடு காவல்துறையின் மீது கோபம் பொங்கியது.
5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் பல துறைகள் முன்னேறியிருந்தாலும், காவல்துறையின் செயல்பாடுகள் வேகமானதாகவும் முன்கூட்டியே கணிக்கக்கூடிய வகையிலும் இல்லை என்கிற குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. காவல்துறை என்பது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள துறை என்பதால் அதன் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் நியாயமானதுதான். எனினும், வழக்குகளைக் கையாள்வதில் வெளிப்புற அழுத்தங்களைத் தாண்டிய ஆழமான-அறிவியல்பூர்வமான விசாரணையில் தமிழ்நாடு காவல்துறை எப்போதுமே கவனமாக இருக்கும். இந்த முறை அது கூடுதல் கவனத்துடன் இருந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம், சென்னை அண்ணாப்பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான விவகாரம், கோவை பீளமேடு பகுதியில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பாலியல் கொடூரம் போன்றவற்றில் எதிர்க்கட்சி விமர்சனங்கள், ஊடக விசாரணகைளைக் கடந்து நீதிமன்றத்தில் வலுவான ஆதாரங்களை வைத்து உண்மையை நிலைநாட்டியதை நீதிபதிகளே பாராட்டும்படி அமைந்தது.

அதே நேரத்தில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நடந்த வன்முறை-தீவைப்பு நிகழ்வுகள், மரக்காணம்-கள்ளக்குறிச்சி சாராயச் சாவுகள், சாதி ஆணவப் படுகொலைகள், லாக்கப் மரணங்கள் போன்றவை காவல்துறையின் செயல்பாடுகள் மீதான அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியதை மறுக்க முடியாது. இவற்றை மக்கள் மன்றத்தின் முன் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. அது அவர்களின் ஜனநாயகக் கடமையுமாகும்.
பா.ஜ.க.வும் அதன் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் தமிழ்நாடு தழுவிய அளவில் மார்ச் 17அன்று, தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஆளுக்கொரு நகரத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் போன்றவர்கள் தி.மு.க.வை விமர்சிப்பதாக நினைத்து, பெண்கள் குறித்தும், நடிகைகள் குறித்தும் பேசிய பேச்சுகள் சொந்தக் கூட்டணியில் உள்ள பெண் நிர்வாகிகளாலேயே கண்டனத்திற்குள்ளாயின. மாநில மகளிர் உரிமை ஆணையம் போன்றவையும் கண்டனத்தை வெளியிட்டன. எதிர்க்கட்சியினரின் வரம்புமீறிய பேச்சைக் கண்டித்து, ஆளுங்கட்சியின் மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடிய அளவுக்கு, தன் நெஞ்சை நோக்கி குறிவைத்த அம்பு போல ஆகிவிட்டது பா.ஜ.க-அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆர்ப்பாட்டம்.
கரூரில் கடந்த 2025 செம்டம்பர் 27ல் த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது- குறிப்பாக கரூர் எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜிதான் காரணம் எனப் பழி போட்டுவிட்டு தப்பிக்கப் பார்த்தனர் த.வெ.கவினர். அதன் தலைவர் விஜய் கரூரிலிருந்து தப்பி பனையூர் பண்ணை வீட்டுக்கு ஓடிவிட்டார். பிறகு, இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ விசாரணை என த.வெ.க. தரப்பில் வழக்கு போடப்பட்டு உச்சநீதிமன்றமும் அந்த விசாரணைக்கு உத்தரவிட்டது.
சி.பி.ஐ. விசாரணைக்காக மூன்று முறை டெல்லிக்கு அழைக்கப்பட்டார் விஜய். அண்மையில் மூன்றாவது முறையாக விசாரணைக்கு சென்று திரும்பியபோது, டெல்லி சி.பி.ஐ அலுவலக வளாகத்திலேயே காரில் நின்றபடி அங்கு வந்திருந்த தன்னுடைய ஆதரவாளர்களுக்கு கைக்காட்டினார். கரூர் வழக்கு விசாரணையா, தேர்தல் கூட்டணிக்கான நிர்பந்தமா என ஊடகங்களில் விவாதங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில், கரூர் நெரிசலின் போது, த.வெ.க. சார்பில் படப்பிடிப்பு போல பெரிய பெரிய கேமராக்களில் காட்சிகளைப் பதிவு செய்த வீடியோக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
விஜய் நடித்து சென்சார் சிக்கலால் இதுவரை வெளிவராமல் உள்ள ‘ஜனநாயகன்’ படத்தில், மக்கள் கூட்டத்தைத் தத்ரூபமாக காட்டவேண்டும் என்ற நோக்கத்திலேயே இத்தகைய கேமராக்கள் மூலம் சினிமா படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது என்பதும், மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தால்தான் சினிமா காட்சி தன்னுடைய அரசியலுக்குப் பயன்படும் என்று விஜய் தரப்பு நினைத்ததும், அதனால் விஜய்யின் கரூர் வருகை பல மணிநேரம் தாமதமாகி, நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரழந்தார்கள் என்பதும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களைக் காப்பதுதான் ஜனநாயக அரசியல். மக்களின் உயிரை எடுப்பது என்ன வகை ஜனநாயகமோ?



