செய்தித்தாளில் வந்த த்ரிஷாவின் படத்தை பார்த்துவிட்டு தனது படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தலாமா என்று நினைத்தவர் இயக்குநர் ஷங்கர். சென்னை அழகியாக 1999ல் தேர்வானவர் த்ரிஷா. அது குறித்த செய்தியைப் பார்த்துதான் ஷங்கர் அப்படி நினைத்திருக்கிறார்.
மாடலிங் துறையில் வலம் வந்த த்ரிஷா அதன்மூலமாக சினிமாவில் ’ஜோடி’ உள்ளிட்ட படங்களில் சின்னச்சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். 2002ல் சூர்யாவுடன் ‘மவுனம் பேசியதே’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார்.

கடந்த 24 ஆண்டுகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் த்ரிஷா சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, விணைத்தாண்டி வருவாயா, உனக்கும் எனக்கும் , 96, பொன்னியின் செல்வன், விடாமுயற்சி என்று பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் . ரஜினி, கமல், அஜித்,விஜய், சூர்யா,சிம்பு,விஜய்சேதுபதி, தெலுங்கில் சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். 42 வயதிலும் சினிமாவில் இருக்கிறார். ஆனாலும் ஜோதிகா, சிம்ரன், நயன்தாரா போன்றவர்களுக்கு கிடைத்த மார்க்கெட் த்ரிஷாவுக்கு அமையவில்லை.
இத்தனைக்கும் த்ரிஷா ஏகப்பட்ட லாபிகள் செய்துதான் பல பட வாய்ப்புகளை பெற்றிருக்கிறார் என்கிறது கோடம்பாக்கம். ’குருவி’ படத்தில் நயன்தாராதான் நாயகி என்று எல்லாம் முடிவாகி ஷூட்டிங் கிளம்பும் கடைசி நேரத்தில் அவரை மாற்றிவிட்டு தன்னை வைத்து ஷூட்டிங் போகும் அளவுக்கு எல்லாம் இவர் செய்த லாபிகளால் அதிர்ந்திருக்கிறது கோடம்பாக்கம்.

நடிகர்களுக்கு இருப்பது மாதிரி தன் தோழிகள் மூலமாக தனக்கு ரசிகர் மன்றம் கூட திறந்தார். அடையாறு, திருவான்மியூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள தியேட்டர்களில் தன் படம் ரிலீஸ் ஆகும் நாளில் தனது தோழிகள் மூலம் கட் அவுட், பேனர்கள் வைத்தும் பார்த்தார். இத்தனை செய்தும் ஜோதிகா, சிம்ரன், நயன்தாரா போன்றவர்களுக்கும் கிடைத்த ரசிகர்களின் ஆதரவு த்ரிஷாவுக்கு கிடைக்கவில்லை. அந்த வகையில் த்ரிஷாவுக்கு பெருத்த ஏமாற்றம்தான்.

சிம்ரன், ஜோதிகாவின் மார்க்கெட் போன பிறகும் கூட தனது மார்க்கெட்டை உயர்த்த படாத பாடு பட்டார் த்ரிஷா. ஆனாலும் அது நடக்கவில்லை என்கிற ஆதங்கம் அவருக்கு இருக்கவே செய்கிறது. இதற்கு மேலும் லாபிகள் செய்து என்ன? என்று அலுத்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார். அதனால் சினிமாவில் இருந்து விலகும் முடிவில் இருப்பதாக தகவல். அதற்கேற்றார் போல் அவர் புதுப்படங்களில் கமிட் ஆவதை தவிர்த்து வருகிறார்.



