மடகாஸ்கரில் நிலவி வரும் ‘கெசானி’ (Cyclone Gezani) புயல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக அந்நாடு வரலாறு காணாத பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.
இந்தியப் பெருங்கடல் தீவு நாடான மடகாஸ்கரின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை இந்தப் புயல் தாக்கியதில், இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய இடர் மேலாண்மை ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குறிப்பாக, அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான டோமாசினா (Toamasina) அருகே புயல் கரையை கடந்தபோது மணிக்கு 200 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசிய பலத்த காற்றினால், அப்பகுதியில் இருந்த சுமார் 80 சதவீத கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலால் சுமார் 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, 18,000-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
புயலைத் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக மீட்புப் பணிகளில் பெரும் சவால்கள் நிலவி வருகின்றன. மேலும், மின்சாரக் கம்பங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் சாய்ந்து கிடப்பதால் பல மாவட்டங்கள் இருளில் மூழ்கியுள்ளதுடன், தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையான பாதிப்படைந்திருப்பதால், உள்பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்பதில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் கடும் போராட்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.
மாயமான பலரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு ‘ஃபைடியா’ புயலால் பாதிக்கப்பட்டிருந்த மடகாஸ்கர் மக்கள், தற்போது இந்த கெசானி புயலால் மீண்டும் ஒரு பேரழிவைச் சந்தித்துள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில், மடகாஸ்கர் அதிபர் மைக்கேல் ராண்ட்ரியானிரினா சர்வதேச நாடுகளிடம் அவசர கால உதவிகளைக் கோரியுள்ளார். தற்போது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. காலநிலை மாற்றத்தின் காரணமாக இது போன்ற சக்திவாய்ந்த புயல்கள் அடிக்கடி நிகழ்வது அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)


