நேபாளத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பொக்காராவில் இருந்து தலைநகர் காத்மாண்டு நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து, இன்று அதிகாலை தாதிங் மாவட்டத்தில் உள்ள பிருத்வி நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக திரிசூலி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 12 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் என இதுவரை மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் 300 மீட்டர் ஆழமான பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்ததில், பேருந்து கடுமையாகச் சேதமடைந்தன.
இதனைத்தொடர்ந்து, இவ்விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் நேபாள ராணுவம், ஆயுதப்படை மற்றும் உள்ளூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். குறிப்பாக, விபத்து நடந்த சமயம் அதிகாலை என்பதால், போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் டார்ச் விளக்குகளின் உதவியுடன் ஆற்றுப் படுகையில் இருந்து பயணிகள் மீட்கப்பட்டனர்.மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 26 பயணிகள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளிலும், மேல் சிகிச்சைக்காக காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பயணிகள் பட்டியலில் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இருந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் ஜப்பான் மற்றும் நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து அதிவேகமாகச் சென்றதே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் நேபாளத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. (Online Tamil News)


