விளையாட்டு என்பது நட்புறவின் அடையாளமாகும். போர்க்களத்தில் இரண்டு நாடுகள் பகையுடன் மோதிக் கொண்டாலும் விளையாட்டுக் களத்தில் அவை நட்புடன் மோதிக் கொள்ளும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் அமைந்திருந்தன. அதன் அடையாளமாகத்தான் நவீன ஒலிம்பிக் போட்டிகள் 20ஆம் நூற்றாண்டில் சர்வதேச அளவில் நடத்தப்படும் வழக்கம் தொடங்கியது. ஆனால், அதிலும் பகை உணர்வு வெளிப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
உலகப் போர்கள் நடந்த காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நிறுத்தப்பட்டன. பாதுகாப்பு காரணம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்ட நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் (Russia) நடந்த பனிப்போரின் காரணமாக அமெரிக்க ஆதரவு நாடுகள், சோவியத் யூனியன் ஆதரவு நாடுகள் என உலக நாடுகள் இரு பிரிவுகளாயின. இந்தியா போன்ற நாடுகள் இருபக்கமும் சேராமல், அணி சேரா நாடுகள் என்ற கூட்டமைப்பை உருவாக்கின.
1980ஆம் ஆண்டு ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. 1984ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் சோவியத் யூனியனும் அதன் ஆதரவு நாடுகளும் பங்கேற்கவில்லை. 1988ஆம் ஆண்டு தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்தான் இரு தரப்பும் ஒரு சேரப் பங்கேற்றன. இப்போது சோவியத் யூனியனுமில்லை, அமெரிக்காவுடனான பனிப்போரும் இல்லை. அதனால் ஒலிம்பிக் போட்டிகளில் இதுபோன்ற புறக்கணிப்புகள் இல்லை. ஆனால், கிரிக்கெட்டை அது பற்றிக் கொண்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டு பிரபுக்களின் பகல் நேர வெயில் காயும் விளையாட்டாகத் தொடங்கிய கிரிக்கெட், அந்த நாட்டில் பரவலாக விளையாடப்படுகிறது. பிரிட்டிஷார் எந்தெந்த நாடுகளில் ஆதிக்கம் செலுத்தினார்களோ அங்கே கிரிக்கெட்டும் இப்போது வரை ஆதிக்கம் செலுத்துகிறது. பிரிட்டிஷார் ஆட்சி செய்தவரை ஒன்றாக இருந்த இந்தியா, அவர்களின் வெளியேற்றத்தின்போது இந்தியா-பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பின்னர் பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிந்தது. இந்த மூன்று நாடுகளிலும் கிரிக்கெட் என்பது முக்கியமான விளையாட்டாக உள்ளது.
இந்தியாவும் இங்கிலாந்தும் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை விளையாட்டு என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல், ஒரு யுத்தம் போல சித்தரிப்பதை ஊடகங்கள் வழக்கமாகக் கொண்டதால், ரசிகர்களிடமும் அதே மனநிலை உருவானது. போதாக்குறைக்கு, பா.ஜ.க.வும் அதன் துணை அமைப்புகளும் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடும் நாட்களில், இந்தியாவின் வெற்றிக்காக யாகம் செய்வது, மந்திரங்கள் ஓதுவது என வெளிப்படையாகவே பகை உணர்வை வளர்த்தனர். இதே நிலைதான் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடமும் வெளிப்பட்டது.
1999ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் யார் பக்கம் வெற்றி என்பதில் பல கட்டத் திருப்பங்கள் ஏற்பட்டு, இறுதியில் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் பந்து வீச்சினால் வெற்றி பெற்றனர். சேப்பாக்கத்தில் திரண்டிருந்த இந்திய ரசிகர்களக்கு ஏமாற்றம்தான். ஆனாலும், வெற்றிக்களிப்பில் பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் மைதானத்தை சுற்றி வந்தபோது, அரங்கில் இருந்த ரசிகர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதுதான் விளையாட்டு ஏற்படுத்த வேண்டிய உணர்வு.(Online Tamil News)
அதற்கு மாறாக, கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, இந்தியாவின் அகமதாபாத் நகரத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் (Narendra Modi Stadium) நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் அவுட் ஆகி பெவிலியன் திரும்பும்போது, அவர்கள் காதுபட, ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று கத்துகிற அவலம் நடந்தது. பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் முஸ்லிம்கள் என்பதால் மதவெறியுடன் இப்படி கோஷம் போடும் கலாச்சாரத்தைத்தான் விளையாட்டு ரசிகர்களிடம் வளர்த்து வைத்திருக்கிறோம்.
அண்மையில் பங்களாதேஷில் நடந்த போராட்டம், ஆட்சி மாற்றம் இதன் விளைவாக இந்தியாவுக்கும் பங்களாதேஷூக்கும் சுமூக உறவு இல்லை. பங்களாதேஷூம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுதான். அங்கு சிறுபான்மை இந்துக்கள் மீது தாக்குதல் நடக்கிறது. உயிரிழப்புகள் தொடர்கின்றன. இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளைப் புறக்கணிப்பதாக பங்களாதேஷ் அறிவித்தது. அதனால் கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் ஐ.சி.சி., பங்களாதேஷூக்குப் பதில் ஸ்கர்ட்லாந்தை இடம்பெறச் செய்துள்ளது. பாகிஸ்தானும் இந்தியா அணியுடன் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்தில் பங்கேற்க முடியாது என அறிவித்துள்ளது. அந்தந்த நாட்டு ஆட்சியாளர்களின் மதவெறி எனும் சுழல் பந்து, ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் எனும் விளையாட்டை சிதைத்து வருகிறது.



