மனித உடல் இயல்பாக ஆக்ஸிஜன் இன்றி சில நிமிடங்களே உயிர்வாழ முடியும். ஆனால் அந்த அடிப்படை உயிரியல் எல்லையையே சவாலாக மாற்றி, ஐரோப்பாவின் உயரமான மலை சிகரமான மவுண்ட் எல்ப்ரஸ் (Mount Elbrus) மீது ஆக்ஸிஜன் உதவி இன்றி தொடர்ந்து 24 மணி நேரம் தங்கி உலக சாதனை(World News) படைத்துள்ளார் ஹரியானாவைச் சேர்ந்த இந்திய மலையேறுபவர் ரோத்தாஷ் கிலேரி. கடல் மட்டத்திலிருந்து 5,642 மீட்டர் உயரத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனை, இதற்கு முன் யாராலும் செய்யப்படாத ஒன்று என்பதால் உலகளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
பொதுவாக மலையேற்ற முயற்சிகளில் “விரைவாக ஏறி, விரைவாக இறங்குதல்” என்பதே பாதுகாப்பான முறையாக கருதப்படுகிறது. ஆனால் ரோத்தாஷ் கிலேரியின் சாதனை, அதற்கு முற்றிலும் மாறானது. நீண்ட நேரம் உயரமான பகுதிகளில் தங்கி இருப்பது, உடலுக்கு மிகப்பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தும். ஆக்ஸிஜன் பற்றாக்குறை நேரம் செல்லச் செல்ல அதிகரிக்கும்; உடல் மீளும் வாய்ப்பே இல்லாமல் போகும். இதனால்தான் விஞ்ஞானிகள், குறுகிய நேர ஏற்றத்தைவிட நீண்ட நேர தங்குதல் பல மடங்கு ஆபத்தானது என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த சாதனையை விஞ்ஞானிகள் “நிஜ உலக உடல் தாங்குதன்மை (Endurance) சோதனை” என வர்ணிக்கின்றனர். அதிக உயரங்களில் மனித உடல் உயிர்வாழும் விதம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், ஆக்ஸிஜனை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தும் திறன், சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, உடலின் ஆற்றல் சேமிப்பு போன்ற மாற்றங்கள் முக்கிய பங்கு வகிப்பதை காட்டுகின்றன. அதே நேரத்தில், உளவியல் சவால்களும் மிகப்பெரியவை. நீண்ட நேர ஹைப்பாக்சியா (Hypoxia – ஆக்ஸிஜன் குறைபாடு) மனதின் தீர்மான திறனை மங்கச் செய்து, தவறான முடிவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
சாதனைக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த ரோத்தாஷ் கிலேரி, இது 8 ஆண்டுகளாக கனவாக இருந்த ஒரு பைத்தியக்கார கனவு என்று கூறியுள்ளார். கடந்த காலங்களில் கடுமையான பனிப்புண் (Frostbite) காரணமாக இழப்புகளையும் சந்தித்திருந்தாலும், தனது இலக்கில் இருந்து ஒருபோதும் விலகவில்லை. கடுமையான பயிற்சி, கட்டுப்பாடு, மற்றும் ஆதரவாளர்களின் ஊக்கம் தான் இந்த வெற்றிக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இன்று, அவரது பயணம் உயிர்வாழ்தல் அறிவியலுக்கே ஒரு நேரடி ஆய்வாக மாறியுள்ளது.
5,000 மீட்டர் உயரத்துக்கு மேல், கடல் மட்டத்தில் உள்ள ஆக்ஸிஜனின் சுமார் 50 சதவீதம் மட்டுமே கிடைக்கும். இதனால் மூச்சுத் திணறல், இதய துடிப்பு அதிகரிப்பு, சிறிய அசைவுகளுக்கே அதிக ஆற்றல் செலவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குளிர், கடும் காற்று, நீரிழப்பு ஆகியவை இந்த அழுத்தத்தை மேலும் தீவிரமாக்கும். உடல் வெப்பம் வேகமாக இழக்கப்படும்; மனம் குழப்பமடையும்; நேர உணர்வு மாறுபடும். மவுண்ட் எல்ப்ரஸில், அசையாமல் இருப்பதும் ஏறுவதும் ஒரே அளவுக்கு ஆபத்தானதாகும்.
இந்த சாதனை மலையேற்றத்துடன் மட்டுமல்லாமல், விண்வெளி மருத்துவம், துருவப் பகுதிப் பயணம், மீட்பு நடவடிக்கைகள் போன்ற துறைகளுக்கும் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. ஆக்ஸிஜன் குறைவான சூழலில் மனித உடல் நீண்ட நேரம் எப்படி செயல்படுகிறது என்பதற்கான தகவல்கள், விண்வெளி வீரர்கள் மற்றும் உயர் அபாய தொழில்களில் பணியாற்றும் மீட்புக் குழுக்களின் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்த உதவும்.
அப்படியெனில், மனிதர்கள் மலைகளில் ஆக்ஸிஜன் இன்றி 24 மணி நேரம் தங்க முடியுமா? அறிவியல் ரீதியாக சாத்தியம் உள்ளது; ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அது சாத்தியமில்லை. மாதங்கள் நீண்ட பழகுதல் (Acclimatisation), துல்லியமான திட்டமிடல், மற்றும் அபாரமான மன கட்டுப்பாடு இருந்தாலே இது சாத்தியம். இந்த சாதனை மனித பாதுகாப்பு எல்லைகளை மறுவரையறை செய்யவில்லை; ஆனால் மனித திறனின் எல்லை நாம் நினைப்பதைவிட அதிகம் என்பதை உறுதியாக நிரூபித்துள்ளது.


