சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, தனியார் எரிபொருள் நிறுவனமான ஷெல் (Shell) இந்தியாவில் தனது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால் ஒரே மாத காலத்திற்குள் ஷெல் நிறுவனம் இரண்டாவது முறையாக விலையை ஏற்றியிருப்பது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் 7.41 ரூபாய் வரையிலும், டீசல் விலை மிகக் கடுமையாக லிட்டருக்கு 25.01 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஷெல் பங்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் 120 ரூபாயை நெருங்கியுள்ளது. அதே வேளையில், இந்தியன் ஆயில் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இதுவரை பெரிய மாற்றங்களைச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் நிறுவனங்களின் இந்த தொடர் விலை உயர்வு காரணமாக, சரக்கு வாகனங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கையாளும் போக்குவரத்துத் துறை கூடுதல் சுமையைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வரும் நாட்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.(Online Tamil News)


