ஈரான் நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் போர் சூழலில், அந்த நாட்டின் புதிய உச்சபட்ச தலைவராக (Supreme Leader) நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei), அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கடுமையாக காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் முந்தைய தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய தலைவராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், கடந்த சில மணிநேரங்களாக டெஹ்ரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய ராணுவத் தளங்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் சரமாரியான குண்டுமழை பொழிந்தது.

இந்தத் தாக்குதலின் போது புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி தங்கியிருந்த ரகசிய இடமும் தாக்கப்பட்டதாகவும், இதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், ஈரான் தரப்பில் இந்தத் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. மாறாக, தங்கள் புதிய தலைவரின் தலைமையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளுக்குத் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் புதிய தலைமை அங்கீகரிக்கப்படாது என்றும், அந்நாடு தனது அணுஆயுதத் திட்டங்களைக் கைவிடும் வரை தாக்குதல்கள் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார். இதற்கிடையில், இந்த மோதலால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)


