இளம்பெண்ணைப் பார்த்து கண்ணடித்து பிளையிங் கிஸ் கொடுத்த முதியவருக்கு பாலியல் வழக்கில் தண்டனை அளித்திருக்கிறது நீதிமன்றம்.
ஒரு பெண்ணை வன்கொடுமை செய்வது மட்டும் அல்ல, கண்ணடிப்பதும், பிளையிங் கிஸ் கொடுப்பதும் கூட பாலியல் தொல்லைதான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது நீதிமன்றம்.
ஆபாசமாக பேசினாலும் அது பெண்ணுக்கு எதிரான பாலியல் தொந்தரவுதான் என்கிறது நீதிமன்றம். பெண்ணுக்கு அசௌகரியம் தரும் வகையிலான எதுவும் பாலியல் தொல்லைதான் என்கிறது சட்டம்.

சண்டிகர் மாவட்டத்தில் கடந்த 2021ல் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி அன்று தன் வீட்டிற்கு எதிரே வாசல் பெருக்கிக் கொண்டிருந்துள்ளார் ஒரு பெண். அப்போது போதையில் இருந்த 62 வயதுள்ள ஆண் அந்தப்பெண்ணைப் பார்த்து கண்ணடித்து பிளையிஸ் கிஸ் கொடுத்திருக்கிறார். 500 ரூபாய் பணத்தையும் அந்தப்பெண் மீது வீசியிருக்கிறார். இதில் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப்பெண் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இந்த வழக்கு சண்டிகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சம்பவம் குறித்து மீடியாக்களில் செய்தி வந்ததும், பெண்ணுக்கு நியாயம் வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் கண்ணடிப்பதும், பிளையிங் கிஸ் கொடுப்பதும் பாலியல் தொல்லை. பெண்ணின் கண்ணியத்தை குலைக்கும் வார்த்தை அல்லாத எந்த செயலும் பாலியல் தொல்லைதான். இதில் கண்ணடித்தல், பிளையிங் கிஸ் அடங்குகிறது என்று சொல்லி, அசோக்குமார் குற்றவாளி என்று சொன்ன நீதிபதி, குற்றவாளி 6 மாத காவல் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் வேறு ஏதேனும் தவறு செய்தால் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி சச்சின் யாதவ்.



