தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய்யின் வருகை மற்றும் அவரது சமீபத்திய பேச்சுகள் குறித்து இயக்குனர் சேரன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒரு புதிய கட்சி தொடங்கி மக்களிடம் வாக்கு கேட்க வரும்போது, நாட்டின் நிலவும் பிரச்சனைகள் என்ன, அவற்றை உங்கள் கட்சி எவ்விதமான திட்டங்கள் மூலம் தீர்க்கப் போகிறது மற்றும் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறீர்கள் என்பதைப் பற்றிப் பேச வேண்டுமே தவிர, “உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா அல்லது நான் வேணுமா?” என்று கேட்பது ஒரு நாட்டை ஆள்வதற்கான தகுதியாகாது என்று அவர் சாடியுள்ளார்.
மேலும், விஜய்க்கும் திமுகவிற்கும் இடையே என்னதான் தனிப்பட்ட பிரச்சனை என்பது பொதுமக்களுக்கோ அல்லது அவரது ரசிகர்களுக்கோ கூடத் தெரியவில்லை என்றும், அப்படி என்ன கோபம் இருந்தால் அதை வெளிப்படையாகச் சொன்னால் மக்கள் ஆதரவு தருவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெறும் சினிமா வசனங்களைப் பேசுவதால் மட்டும் மக்கள் ஏன் ஓட்டு போட வேண்டும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக இயங்கும் பாரம்பரிய கட்சிகள் மற்றும் கடந்த 15 ஆண்டுகளாக மக்களுக்காகத் தொடர்ச்சியாகக் களத்தில் நின்று போராடி வரும் புதிய மாற்றத்தை விரும்பும் கட்சிகள் பல உள்ளன. இவர்களையெல்லாம் தாண்டி இதுவரை மக்களுக்காக எந்தப் போராட்டத்திலும் பங்கெடுக்காத நீங்கள், எந்த அடிப்படையில் அந்தப் போராளிகளை விட உயர்ந்தவர் என்று கூறுகிறீர்கள் என்றும், நேரடியாக “இரண்டு கட்சிக்குத்தான் போட்டி” என்று சொல்வது மற்றவர்களின் உழைப்பை அவமதிப்பதாகும் என்றும் காட்டம் தெரிவித்துள்ளார்.
அரசியல் களம் என்பது வீராவேசமாகப் பேசுவதற்கான அரட்டை அரங்கம் அல்ல என்றும், நட்சத்திர அந்தஸ்தை மட்டும் நம்பி வராமல் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அடிப்படைப் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து அதற்கான திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே தமிழகம் பல ஆண்டுகளை இழந்துவிட்ட நிலையில், மக்களின் உணர்வுகளைப் புரியாத ஒரு தலைமை மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சேரன், மக்களுடன் மக்களாக நின்று இளைய தலைமுறையை வழிநடத்தும் உண்மையான தலைவரையே தமிழகம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.(Online Tamil News)


