தனது 88ஆவது வயதில் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன். 1997க்கு பிறகும் மீண்டும் தனிக்கட்சி தொடங்கி இருக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
அண்ணாவால் 1967ல் சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் பண்ருட்டி ராமச்சந்திரன். 1971ல் கலைஞரால் போக்குவரத்து துறை அமைச்சரானார். 1977ல் அதிமுகவில் இணைந்தார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகித்தவர், எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா அணியில் முக்கிய பங்காற்றினார். அதே ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன போது வெளியேறி பாமகவில் இணைந்தார். 1991ல் அப்போதைய பாமகவின் சின்னமான யானை சின்னத்தில் நின்று பாமகவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

பின்னர் பாமகவில் இருந்து விலகி ‘மக்கள் நல உரிமைக்கழகம்’ தனிக்கட்சி தொடங்கி 1997ல் திமுக கூட்டணியில் இணைந்தார். 2005ல் விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கியப்போது அக்கட்சியின் அவைத்தலைவராக இருந்தார். 2013ல் விஜயகாந்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேமுதிகவில் இருந்து விலகி அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்தார். ஆனால், 2014ல் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இனைந்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக்க முயன்று அது நடக்காமல் போன பின்னர் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். அதிமுக பிளவுபட்டபோது ஓபிஎஸ் அணியில் நின்று ஆலோசனைகள் வழங்கி வந்தார். 2026 சட்டமன்ற தேர்தல் நெருக்கத்திலும் கூட சுயமாக எந்த முடிவையும் எடுக்காமல் ஓபிஎஸ் காலம் தாழ்த்திக் கொண்டே இருப்பதால் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி மீண்டும் தனிக்கட்சி தொடங்குகிறார் பண்ருட்டியார்.
’எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று தனிக்கட்சி தொடங்கும் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.



