கேரள மாநில நீதித்துறை (Kerala judiciary) வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளார் 24 வயது இளம் பெண்ணான தன்யா நாதன். பிறப்பிலிருந்தே 100% பார்வைத்திறன் அற்றவரான இவர், கேரளாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி சிவில் நீதிபதியாகத் தேர்வாகி ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த தன்யா (DhanyaNadhan), தனது பள்ளிப் பருவத்திலிருந்தே பல்வேறு சவால்களைத் தாண்டி கல்வியில் சிறந்து விளங்கினார். கண்ணூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற இவர், அங்கு பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று தனது திறமையை அப்போதே நிரூபித்திருந்தார். சட்டப்படிப்பை முடித்த பிறகு தாலிப்பறம்பா நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கிய தன்யா, விடாமுயற்சியுடன் நீதிபதி தேர்விற்குத் தயாராகி வந்தார்.
கேரள உயர்நீதிமன்றம் நடத்திய சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். பார்வை மாற்றுத்திறனாளிகள் நீதிபதியாகப் பணியாற்ற முடியுமா என்ற நீண்ட கால விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அவர்களுக்குச் சாதகமாக அமைந்தன.
தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால், ‘ஸ்கிரீன் ரீடர்’ போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி ஆவணங்களை வாசிப்பதிலும், வழக்குகளை ஆய்வு செய்வதிலும் தம்மால் திறம்படச் செயல்பட முடியும் என தன்யா நாதன் நிரூபித்துள்ளார். ஊனம் என்பது இலக்கை அடைவதற்கு ஒரு தடையல்ல என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ள இவரது வெற்றி, தற்போது இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகமாகவும் நம்பிக்கையாகவும் மாறியுள்ளது. கேரள முதல்வர் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இந்த இளம் சாதனையாளருக்குத் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.(Online Tamil News)


