சென்னை நகரின் பல பகுதிகளில், குறிப்பாக அடையாறு பகுதிகளில், கடந்த ஜனவரி மாதம் பல காகங்கள் காரணம் தெரியாமல் இறந்ததாக புகார்கள் வந்தன. இதையடுத்து, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் Animal Disease Intelligence Unit சார்பில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
சென்னையில் கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்த காகங்கள் காரணமாக H5N1 வகை பறவை காய்ச்சல் (Bird Flu) இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடுமுழுவதும் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினாலும், அதிகாரிகள் “பீதி தேவையில்லை” எனத் தெளிவுபடுத்தியுள்ளனர்
H5N1 உறுதிப்படுத்தப்பட்டது எப்படி?
இந்த மாதிரிகள், மத்திய பிரதேசம் – போபாலில் உள்ள ICAR – National Institute of High Security Animal Diseases (NIHSAD) ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு மேற்கொண்ட ஆய்வுகளில், அந்த காகங்களில் மிகவும் ஆபத்தான H5N1 வகை பறவை காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மத்திய அரசு & மாநில அரசின் நடவடிக்கை
இந்த உறுதிப்படுத்தலுக்குப் பிறகு, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதி தகவல் தெரிவித்தது.
அதில்,
- பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்கும் உயிரியல் பாதுகாப்பு (Bio-security) நடவடிக்கைகள்
- பறவைகள் இறந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு
- கோழிப் பண்ணைகள் மற்றும் பறவைகள் மீது கண்காணிப்பு அதிகரிப்பு
ஆகியவற்றை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.( Online Tamil News )
மனிதர்களுக்கு ஆபத்து இருக்கிறதா?
H5N1 என்பது மிருகங்களில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய (Zoonotic) வைரஸ் வகைதான். ஆனால், மனிதர்களுக்கு பரவுவது மிகவும் அரிது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஏ. சோமசுந்தரம் கூறியதாவது:
“இறந்த பறவைகளை கையுறையின்றி தொடுவது, அதன் பிறகு கண், வாய் போன்ற பகுதிகளைத் தொடுவது போன்ற சூழ்நிலைகளில் மட்டுமே மனிதர்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதுவரை அப்படியான சம்பவங்கள் மிகக் குறைவு. பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை.”
மக்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்கள்
பொது சுகாதார மற்றும் கால்நடை துறைகள் இணைந்து, பொதுமக்களுக்குப் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன:
- இறந்த பறவைகளை கையால் நேரடியாகத் தொட வேண்டாம்
- அவசியமானால் கையுறை (gloves) அணிய வேண்டும்
- பறவைகளை கையாள்ந்த பிறகு சோப்பு மற்றும் நீரால் கைகளை நன்றாக கழுவ வேண்டும்
- பாதி வேகவைத்த இறைச்சி, முழுமையாக வேகவைக்காத முட்டை உண்பதை தவிர்க்க வேண்டும்
- பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பகுதிகளுக்கு அருகில் தேவையில்லாமல் செல்ல வேண்டாம்
- சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்
அறிகுறிகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
பறவைகள் அல்லது இறந்த காகங்களை கையாள்ந்தவர்கள், கோழிப் பண்ணை தொழிலாளர்கள் போன்றோர், காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
இறந்த பறவைகள் எவ்வாறு அகற்றப்படுகின்றன?
வைரஸ் பரவாமல் இருக்க, இறந்த பறவைகள்:
- எரித்தல் (Burning)
- அல்லது 8–10 அடி ஆழத்தில் புதைத்தல் (Deep Burial) என்ற முறைகளில் பாதுகாப்பாக அகற்றப்படுகின்றன. காட்டு பகுதிகளில் வனத்துறை குழுக்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.
சென்னையில் கண்டறியப்பட்ட H5N1 பறவை காய்ச்சல் சம்பவம் அதிக கவனத்துடன் கையாளப்பட்டு வருகிறது. அரசு துறைகள் முழுமையாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சமின்றி, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே அதிகாரிகளின் வேண்டுகோள்.


