இஸ்ரேலிய உளவு மென்பொருள் நிறுவனமான ‘பாரகன்’ (Paragon) தற்செயலாகச் செய்த ஒரு செயல், உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு வல்லுநர்களை நிலைகுலையச் செய்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘கிராஃபைட்’ (Graphite) மென்பொருளின் கட்டுப்பாட்டு அறைத் திரை (Control Panel Screenshot) இணையத்தில் கசிந்திருப்பது, ஒரு சாதாரணத் தொழில்நுட்பக் கோளாறு என்பதைத் தாண்டி, நவீன உளவு உலகம் எவ்வளவு ஆபத்தானது என்பதை உலகுக்குக் காட்டியுள்ளது.

இந்தத் திரையில், உளவு பார்க்கப்படும் நபர்களின் தொலைபேசி எண்கள் மிகத் தெளிவாகத் தெரிவதோடு, அவர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் (WhatsApp), சிக்னல் (Signal) மற்றும் டெலிகிராம் (Telegram) போன்ற செயலிகளின் பாதுகாப்பு அரண்களைத் தகர்த்து, அவர்களின் தனிப்பட்ட உரையாடல்களை நேரலையாகக் கண்காணிக்கும் ‘டாங்கிள்’ (Toggle) வசதிகள் இருந்ததும் உறுதியாகியுள்ளது. மேலும், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் எனப்படும் உயர்தரப் பாதுகாப்பு வசதிகள் கூட, இந்தப் பாரகன் நிறுவனத்தின் மென்பொருளுக்கு முன்னால் ஒன்றுமில்லை என்பதை இது நிரூபித்துள்ளது.

இந்த விவகாரம் வெறும் தொழில்நுட்பத் தோல்வி மட்டுமல்ல, இது ஒரு ஆழமான அரசியல் சதிவலை என்பதையும் கசிந்த தரவுகள் உணர்த்துகின்றன. இந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருக்கும் எஹுத் பராக் (Ehud Barak), சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் கொண்டிருந்த நீண்டகால நெருக்கமானத் தொடர்பு, இந்த உளவு மென்பொருள் எத்தகைய சக்திகளுக்காகச் செயல்படுகிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், எப்ஸ்டீனின் தனி விமானத்தில் பலமுறை பயணம் செய்ததும், அவருக்குச் சொந்தமான இடங்களில் தங்கியிருந்தது எனப் பல்வேறு புகார்களில் சிக்கிய எஹுத் பராக், இப்போது இத்தகைய ஒரு உளவு நிறுவனத்தை வழிநடத்துவது என்பது தனிமனித சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகும். மேலும், எப்ஸ்டீன் போன்றவர்கள் பண பலத்தால் எத்தகைய அதிகார மையங்களைக் கட்டுப்படுத்தினார்களோ, அதே போன்ற ஒரு அதிகார அச்சுறுத்தலை பாரகன் நிறுவனம் டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாக இன்று செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த உளவு ஆயுதத்தின் மிகக் கொடூரமான அம்சம் என்னவென்றால் நேர்மையான பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்கள் இதன் முதல் இலக்குகளாக இருந்தாலும், இதன் உண்மையான நோக்கம் அதிகாரப் போட்டியில் இருப்பவர்களை வீழ்த்துவதே ஆகும். குறிப்பாக, அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஒரு நாட்டின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் உயர்மட்ட அதிகாரிகளின் அந்தரங்கத் தகவல்களைத் திருடி, அவர்களை மிரட்டுவதற்கும் அல்லது அவர்களின் அரசியல் வாழ்வைச் சிதைப்பதற்கும் இந்த மென்பொருள் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.(Online Tamil News)


