அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில், கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆந்திராவைச் சேர்ந்த 23 வயது இந்திய மாணவி ஜானவி கந்துலா (Jaahnavi Kandula) , சியாட்டில் காவல் அதிகாரி கெவின் டேவ் ஓட்டி வந்த ரோந்து வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வந்த ஜானவி, விபத்து நடந்த அன்று சாலையைக் கடக்க முயன்றபோது, மணிக்கு 119 கிலோமீட்டர் வேகத்தில் வந்த காவல் அதிகாரி கார் அவர் மீது மோதியது. அந்தச் சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட சுமார் மூன்று மடங்கு அதிக வேகத்தில் கார் இயக்கப்பட்டதே இந்த அகால மரணத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்தச் சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதற்கு மற்றொரு முக்கியமான காரணம், விபத்து நடந்த பிறகு மற்றொரு போலீஸ் அதிகாரியான டேனியல் ஆடரர் என்பவர் நடந்துகொண்ட விதம் ஆகும். அவரது சீருடையில் இருந்த கேமராவில் பதிவான உரையாடலில், ஜானவியின் மரணத்தைப் பற்றி மிகவும் கேவலமாகவும், மனிதாபிமானமின்றியும் அவர் சிரித்துப் பேசியது வெளியானது. ஜானவியின் உயிருக்கு “குறைந்த மதிப்பு” (Limited value) தான் என்றும், ஒரு 11,000 டாலர் செக் எழுதி கொடுத்தால் இந்த விவகாரம் முடிந்துவிடும் என்றும் அவர் ஏளனம் செய்தது, இந்தியர்கள் மற்றும் அமெரிக்க வாழ் புலம்பெயர்ந்தோரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தக் கொடூரமான விபத்து மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு தொடர்பாக ஜானவியின் குடும்பத்தினர் சட்ட ரீதியான போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்திய அரசும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் வலியுறுத்தியது. இந்தச் சூழலில், ஜானவியின் மரணத்திற்குப் பொறுப்பேற்கும் விதமாகவும், அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட பேரிழப்பைச் சரிகட்டும் முயற்சியாகவும், சியாட்டில் நகர நிர்வாகம் தற்போது 29 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 262 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.
இந்தத் தீர்வு குறித்து பேசிய சியாட்டில் நகர வழக்கறிஞர், ஜானவியின் மரணம் மிகவும் துயரமானது என்றும், அவரது குடும்பத்திற்கு இந்த நிதி உதவி ஒரு சிறிய ஆறுதலாக இருக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார். அதேசமயம், இந்த இழப்பீடு வழங்கப்படுவதன் மூலம் ஜானவியின் குடும்பத்தினர் தொடர்ந்த சிவில் வழக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் தவறிழைத்த அதிகாரிகள் மீது ஏற்கனவே துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜானவியின் உயிர் இழப்புக்குக் கிடைத்துள்ள இந்த நீதி, வெளிநாடுகளில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை முன்னெடுத்துள்ளது.(Online Tamil News)


