கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கவடியார் அரண்மனையில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பழங்கால நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் திருடு போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் திருவிதாங்கூர் ராஜகுடும்பத்தின் வசிப்பிடமான இந்த அரண்மனையின் முதல் தளத்தில் உள்ள அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி பாயின் படுக்கையறை லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பல தலைமுறை பழமையான தங்க நகைகள், நவத்தினங்கள் மற்றும் அபூர்வ நாணயங்கள் மாயமாகியுள்ளன.
இந்தத் திருட்டுச் சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே நடந்ததாகக் கருதப்பட்டாலும், காணாமல் போன நகைகள் அரண்மனைக்குள்ளேயே எங்காவது தவறுதலாக வைக்கப்பட்டிருக்கலாம் என்று ராஜகுடும்பத்தினர் முதலில் நினைத்துள்ளனர். இதனால் அவர்கள் நீண்ட நாட்களாகத் தேடிப் பார்த்தும் நகைகள் கிடைக்காத நிலையில், கடந்த மார்ச் 13-ம் தேதிதான் அதிகாரப்பூர்வமாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 305-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அரண்மனை வளாகம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில் இருப்பதாலும், தனியார் பாதுகாப்பு ஏஜென்சியின் பாதுகாப்பில் அரண்மனை இருப்பதாலும், உள்ளே இருப்பவர்களுக்கே இதில் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திலிருந்து கைரேகைகளைச் சேகரித்துள்ள நிலையில், அரண்மனையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் லாக்கரில் இருந்த பல கோடி மதிப்புள்ள பொருட்கள் திட்டமிட்டுத் திருடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. (Online Tamil News)


