பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் 6 பேர் கண்பார்வையை இழந்து சிகிச்சை பெற்று வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு மோதிஹாரிக்கு உட்பட்ட துர்கௌலியா மற்றும் ரகுநாத்பூர் பகுதிகளில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்தியவர்களுக்குத் திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஏழு பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஆறு பேருக்குத் தற்காலிகமாகவோ அல்லது முழுமையாகவோ பார்வை பறிபோயுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கோரச் சம்பவம் தொடர்பாகத் தீவிர நடவடிக்கை எடுத்துள்ள மாவட்ட நிர்வாகம், பணியில் கவனக்குறைவாக இருந்ததாகத் துர்கௌலியா காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி மற்றும் கிராமக் காவலரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் இருந்தாலும், கள்ளச்சந்தையில் விற்கப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த சாராயத்தால் இத்தகைய உயிரிழப்புகள் தொடர்வது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து நிதிஷ் குமார் தலைமையிலான அரசின் மதுவிலக்குக் கொள்கையைத் தீவிரமாக விமர்சித்து வருகின்றன. தற்போது அந்தப் பகுதிகளில் கள்ளச்சாராயப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மதுவிலக்கு அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.(Online Tamil News)


