நாடாளுமன்ற மக்களவை (லோக்சபா) சபாநாயகர் ஓம்பிர்லா மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடையும் என்பது எல்லாருக்கும் தெரியும். மக்களவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், அதன் ஆதரவு உறுப்பினர்களுக்கும் உள்ள பலத்தைவிட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலம் குறைவுதான். நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட பிறகு பேசிய பிரதமர் மோடி, சபாநாயகர் பாரபட்சமில்லாத தலைமைப் பண்புடன் அவையை நடத்துவதாகப் பாராட்டியிருக்கிறார். இந்தப் பாராட்டு உண்மையல்ல என்பது மோடிக்கே தெரியும். ஒருவேளை, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதிகம் கலந்துகொள்ளாத பிரதமர் மோடி, உண்மையை அறியாதவராக இருந்தாலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல் பா.ஜ.க.வின் எம்.பிக்கள் வரை அத்தனை பேரும் அறிந்திருப்பார்கள்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஒரு புத்தகத்தின் சில வரிகளைப் படித்தார். உடனே ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து அமளி துமளி. சபாநாயகரும் அந்தப் புத்தக வரிகளை எதிர்க்கட்சித் தலைவர் படிப்பதற்கு அனுமதி கொடுக்க மறுத்தார். இந்திய-சீன எல்லை நிலவரம் பற்றி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி எழுதிய புத்தகம் அது. மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு எல்லைப் பிரச்சினைகளில் எப்படி செயல்படுகிறது-உண்மை நிலவரம் என்ன என்பதை அதில் அந்த அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார். அதனால்தான் அதனைப் படிக்க அனுமதிக்கவில்லை.
முதல் நாளும் சபாநாயகரின் அனுமதி கிடைக்கவில்லை. இரண்டாவது நாளும் அனுமதி கொடுக்கப்படவில்லை. அந்தப் புத்தக வரிகள் படிக்கப்படக்கூடாது என்கிற பா.ஜ.க.வின் நோக்கத்திற்கேற்ப சபாநாயகரின் நடவடிக்கை இருந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்கள் உரிமைக் குரலை எழுப்பிய நேரத்தில், புத்தகத்தைப் பதிப்பித்த நிறுவனம் இன்னும் அந்தப் புத்தகத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்று அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, ராணுவத்தில் உயர் பொறுப்பில் இருந்தவர்கள் ஓய்வுக்குப் பிறகு புத்தகம் எழுதுவதற்கு புதிய நிபந்தனைகளை விதிக்கின்ற வகையில் ஒரு குழுவை அமைக்க பா.ஜ.க. அரசு முடிவு செய்தது.
சபாநாயகர் இருக்கையில் ஓம்பிர்லா இருந்தாலும், மாற்று சபாநாயகர்களாக உள்ள பா.ஜ.க. எம்.பி.க்கள் இருந்தாலும் இதே வகையான அணுகுமுறைதான். எதிர்க்கட்சியினர் பேசுவதற்கே அனுமதி கிடையாது. மணிப்பூர் விவகாரமா? பேசமுடியாது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலால் சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோல் பொருட்கள் தட்டுப்பாட்டால் இந்திய மக்கள் பாதிக்கப்படுகிறார்களா? பேச முடியாது. எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரமா? பேசவே முடியாது. தமிழ்நாட்டில் இயற்கைப் பேரிடருக்கு நிவாரண உதவி கேட்டு பேசலாமா? அனுமதி கிடைக்காது. கிடைத்தாலும் நேரம் குறைவுதான். இதுதான் பா.ஜ.க ஆட்சியின் நாடாளுமன்ற ஜனநாயகம். இந்த லட்சணத்தில்தான், சபாநாயகர் ஓம்பிர்லா பாரபட்சமில்லாமல் செயல்படுகிறார் என்று பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார். சபாநாயகர் மனசாட்சியே கூசியிருக்கும். ஏனென்றால், ஆளுங்கட்சியினரான பா.ஜ.க தரப்பினர் பேசும்போது ஓம்பிர்லா அவர்களின் முகபாவனை எப்படி இருக்கும், எதிர்க்கட்சியினர் பேசும்போது எப்படி இருக்கும் என்கிற வேறுபாடுகள் சமூக வலைத்தளங்கள் வரை பரவியிருக்கின்றன.
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு அடிப்படை, 18 வயது நிரம்பிய அனைத்து மக்களுக்குமான வாக்களிக்கும் உரிமை. அதனை செயல்படுத்த வேண்டியது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். அதன் தலைவரான ஞானேஷ்குமாரை நீக்கக் கோரும் தீர்மானத்திற்கு திரிணாமூல் காங்கிரஸ் முன்னெடுப்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கையெழுத்து இயக்கம் நடத்தி, பல கட்சிகளை அதில் இணைத்து, மக்களவை-மாநிலங்களவை இரண்டிலும் இதற்கானத் தீர்மானத்தைக் கொண்டு வருவதில் முனைப்பு காட்டியுள்ளன. எண்ணிக்கை அடிப்படையில் இந்தத் தீர்மானம் வெற்றி பெறுமா என்றால் சாத்தியமில்லைதான். எனினும், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சிறப்பே எதிர்ப்புக் குரலின் தன்மைதான்.

75 ஆண்டுகளைக் கடந்த இந்தியக் குடியரசில் பல சபாநாயகர்களும் தலைமைத் தேர்தல் கமிஷனர்களும் இருந்திருக்கின்றனர். இரு பதவிகளுமே ஆளுங்கட்சியின் ஆதரவில் அல்லது பரிந்துரையில் அமைவதுதான். ஆனால், இதற்கு முன் எந்த சபாநாயகரையும் நீக்க வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் கோரியதில்லை. நேரு, இந்திரா, ராஜீவ், மன்மோகன் சிங் என காங்கிரஸ் ஆட்சிக்கால சபாநாயகர்கள், வாஜ்பாய் தலைமையிலான பா.ஜக. ஆட்சியின் சபாநாயகர்கள், கூட்டணி அரசுகளின் சபாநாயகர்கள் எல்லாருமே ஆளுந்தரப்பின் ஆதரவில் வந்தவர்கள்தான். ஆனால், எதிர்க்கட்சிகள் எதுவும் சபாநாயகரை நீக்கச் சொல்லவில்லை. அரசியல் கட்சிகளின் எண்ணங்களுக்கு மாறாக பல தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கொண்ட தலைமைத் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷனையும் எந்தக் கட்சியும் நீக்கச் சொல்லவில்லை.
மோடியின் பா.ஜ.க. ஆட்சியில்தான் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவைத் தலைவராக இருந்த முன்னாள் துணை ஜனாதிபதி தன்கர், தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் என ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அமைப்புகளின் தலைவர்கள் நீக்கப்பட வேண்டும் என்ற எல்லைக்கு எதிர்க்கட்சிகள் செல்லவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு 12 ஆண்டுகால மோடி ஆட்சி இந்திய ஜனநாயகத்தை சீரழித்துள்ளது.(Online Tamil News)



