மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் போது, மாணவர்களுக்குத் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட உதவியதாக 81 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் நவீன தொழில்நுட்பமான ChatGPT-ஐப் பயன்படுத்தி விடைகளைத் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு தொடங்கிய சில நிமிடங்களிலேயே வினாத்தாள்களை செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து வெளியே இருப்பவர்களுக்கு அனுப்பி, அங்கிருந்து AI தொழில்நுட்பம் மூலம் விடைகளைப் பெற்றுள்ளனர். பின்னர் அந்த விடைகளைப் பள்ளியில் உள்ள பிரிண்டர் மூலம் அச்சிட்டு, சிறிய துண்டுகளாக (பிட்) மாற்றி மாணவர்களுக்கு வழங்கியது விசாரணையில் தெரியவந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக மாநில கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இதுவரை மொத்தம் 81 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் முதற்கட்டமாக 17 பேர் மீது காவல்துறை சார்பில் FIR பதிவு செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக பீடு மாவட்டத்தில் உள்ள சௌசாலா போன்ற பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்ட போது, சுமார் 16 தேர்வு அறைகளில் ஆசிரியர்கள் நேரடியாக மாணவர்களுக்குக் காப்பியடிக்க உதவியது உறுதி செய்யப்பட்டது.(Online Tamil News)


