டெல்லியில் கடந்த நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக திறந்தநிலை பள்ளத்தில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ரோகிணி Rohini செக்டர் 32 பகுதியில் உள்ள மகாசக்தி காளி கோயில் அருகே நேற்று இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பீகார் (Bihar) மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்த 32 வயதான பிரிஜு குமார் என்பவர், அங்குள்ள திறந்த நிலை கழிவுநீர் கால்வாயில் எதிர்பாராதவிதமாக விழுந்துள்ளார். அவர் பள்ளத்தில் விழுந்து நீண்ட நேரமாகியும் மீட்புப் பணிகள் தொடங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இது குறித்து அவரது நண்பர்கள் மாலை 4 மணிக்கே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த தேஜ்பால் யாதவ் என்பவர் 112 என்ற அவசர எண்ணிற்கு அழைத்து புகார் அளித்த பிறகே மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். ஆனால், அதற்குள் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி 6-ம் தேதி மேற்கு டெல்லியின் ஜனக்புரி பகுதியில் டெல்லி குடிநீர் வாரியத்தால் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து 25 வயது மதிக்கத்தக்க வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். அந்தச் சோகம் மறைவதற்குள் தற்போது மீண்டும் ஒரு உயிர் பலியாகியுள்ளது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்தின் அலட்சியமே இதுபோன்ற தொடர் மரணங்களுக்குக் காரணம் என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், இது போன்ற விபத்துகளைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.(Online Tamil News)


