அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று நேற்று எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்தார் கட்சியின் மூத்த நிர்வாகி கே.ஏ.செங்கோட்டையன். இதை நிபந்தனையாக முன்வைத்தார். 10 நாட்கள் காலக்கெடு விதித்திருந்தார்.
இதையடுத்து இன்று திண்டுக்கல்லில் பரப்புரையின் போது திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோருடன் செங்கோட்டையன் விதித்த கெடு பற்றி ஆலோசனை நடத்தினார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இதனால் எடப்பாடி பழனிசாமி மனம் மாறிவிட்டார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் அவர் தடாலடியாக, இந்த ஆலோசனைக்கு பின்னர் அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கம் செய்து அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக அமைப்புச்செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். அது மட்டுமல்லாது, செங்கோட்டையனின் ஆதரவாளர்களையும் கூண்டோடு நீக்கம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதால் உறுப்பினராக மட்டும் தொடர்கிறார் செங்கோட்டையன். தனது பொறுப்புகளை பறித்தது குறித்து, ’’அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்ற தொண்டர்களின், பொதுமக்களின் மனநிலையை பிரதிபலிக்கின்ற வகையில் கருத்துக்களை வெளியிட்டேன். அதை ஏற்றுக்கொள்ளாமல் என்னை பொறுப்புகளில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். கழக பொறுப்புகளில் இருந்து என்னை நீக்கியதால் வேதனை இல்லை; இதற்கு என் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயக முறையில் என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை’’ என்று பொதுவெளியில் தெரிவித்துள்ளார் செங்கோட்டையன்.
சொன்னபடி இணைப்புப் பணியை மேற்கொள்வதுதான் தனது அடுத்தக்கட்ட பணி என்று பொதுவெளியில் சொல்லும் செங்கோட்டையன்,
உண்மையிலேயே அடுத்த கட்ட நகர்வுக்காக தனது ஆதரவாளர்களுடன் ஈரோடு கோபி செட்டிப்பாளையத்தில் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அ.தி.மு.க. கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து அக்கட்சியில் உறுப்பினராக உள்ளார் செங்கோட்டையன். எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் இருந்து அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்டு வருகிறார் செங்கோட்டையன். அவரை கட்சியின் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளதால் அ.தி.மு.க.வில் பரபரப்பு தீ பற்றிக் கொண்டிருக்கிறது.



