ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சரும் பிரபல நடிகருமான பவன் கல்யாண் நடித்துள்ள உஸ்தாத் பகத்சிங் பட விழாவில் நடிகர் பார்த்திபன் பங்கேற்று பேசியது சர்ச்சை ஆகி இருக்கிறது. ‘’என் பெயர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இயற்பெயர் மூர்த்தி. நான் ஒரு நாயுடு மகன். சென்னையில் வளர்ந்ததால் தெலுங்கு தெரியாது’’என்று பேசியிருந்தார்.
தனது சாதி குறித்து பார்த்திபன் பேசியது பெரும் சர்ச்சை ஆன நிலையில் அவர் அதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
’’சத்தியமாக சொல்கிறேன் எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை.

அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி ….இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது .
‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை.
என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன்.

என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக மன்னிப்பைத் தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள்.
உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன்’’ என்கிறார்.



