மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கவும், ஈரான் மீதான மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வரவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 15 முக்கிய நிபந்தனைகள் அடங்கிய புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் கமேனி மற்றும் பல முக்கிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நிலவி வரும் போரை நிறுத்த தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
டிரம்ப்பின் முக்கிய நிபந்தனைகள்:
- அணுசக்தி முடக்கம்: ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை முழுமையாகக் கைவிட வேண்டும் மற்றும் அணு ஆயுதங்கள் தயாரிப்பதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- யுரேனியம் ஒப்படைப்பு: ஈரானிடம் கையிருப்பில் உள்ள யுரேனியத்தில் 60 சதவீதத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) ஒப்படைக்க வேண்டும்.
- மையங்கள் அகற்றம்: நடான்ஸ், இஸ்ஃபஹான் மற்றும் ஃபோர்டோ ஆகிய இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்கள் அகற்றப்பட வேண்டும்.
- ஹோர்முஸ் நீரிணை: உலகளாவிய வர்த்தகத்திற்காக ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் உடனடியாகத் திறந்து விட வேண்டும். தவறினால் மின் நிலையங்கள் தாக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
- ஏவுகணை கட்டுப்பாடு: ஈரானின் ஏவுகணைகள் பாதுகாப்பு நோக்கத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும் மற்றும் அதன் தாக்குதல் தூரம் வரையறுக்கப்பட வேண்டும்.
- பயங்கரவாத ஆதரவு: வெளிநாட்டுப் பயங்கரவாதக் குழுக்களுக்கு ஈரான் அளித்து வரும் ஆதரவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்.
உள்ளிட்ட 15 அம்சத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஈரானின் பதில்:
இந்தத் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான், அமெரிக்கா தனக்குத் தானே பேச்சுவார்த்தை நடத்திக் கொள்வதாகக் கூறி இதனை நிராகரித்துள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் போரை முடிக்க அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.(Online Tamil News)


