ஈரானின் நீண்டகால உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, அண்மையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து ஈரானின் அடுத்த அதிகார மையமாக யார் வருவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில், அலி கமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தாபா கமேனி புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஈரானின் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் மிக உயரிய அமைப்பான ‘நிபுணர்கள் அவை’ (Assembly of Experts), கடந்த செப்டம்பர் மாதமே மொஜ்தாபாவை ரகசியமாகத் தேர்ந்தெடுத்துவிட்டதாகவும், தற்போது நிலவும் போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
55 வயதான மொஜ்தாபா கமேனி, இதுவரை எந்தவொரு பெரிய அரசுப் பதவியிலும் இல்லையென்றாலும், தனது தந்தையின் நிழலாக இருந்து ஈரானின் உளவுத்துறை மற்றும் புரட்சிகர காவல்படையினரை (IRGC) மறைமுகமாக இயக்கி வந்தவர்.
ஈரானிய அரசியலில் வாரிசு அடிப்படையில் தலைவர் நியமிக்கப்படுவது அந்நாட்டின் புரட்சி விதிகளுக்கு எதிரானது என்ற விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், நாட்டின் தற்போதைய ராணுவ நெருக்கடியைக் கையாள மொஜ்தாபா சரியான நபராக இருப்பார் என அந்நாட்டு மதகுருமார்கள் கருதுவதாகத் தெரிகிறது.
குறிப்பாக, ஈரானின் ராணுவ அமைப்பான ஐ.ஆர்.ஜி.சி-யின் முழு ஆதரவு இவருக்கு இருப்பதால், இவருடைய நியமனம் ஈரானின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாதுகாப்புக் கொள்கைகளில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் அரசு இன்னும் இதனை அதிகாரப்பூர்வமாகத் தனது ஊடகங்களில் அறிவிக்கவில்லை என்றாலும், சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஈரான் எதிர்கட்சி ஊடகங்கள் மொஜ்தாபா கமேனி பதவியேற்பதை உறுதிப்படுத்தி வருகின்றன. இந்தப் பதவி மாற்றமானது மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யுமா அல்லது தணிக்குமா என்பதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.(Online Tamil News)


