பாலிவுட் நடிகை சாரா அலி கான் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவதற்கு, தான் ஒரு இந்து மதத்தைப் பின்பற்றுபவர் என்று உறுதி அளிக்கும் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என பத்ரிநாத்-கேதார்நாத் கோவில் கமிட்டி (BKTC) நிபந்தனை விதித்துள்ளது.

தனது முதல் படமான ‘கேதார்நாத்’ படப்பிடிப்பின் போது அந்த இடத்துடன் ஆன்மீக ரீதியாக இணைந்த சாரா அலி கான், ஒவ்வொரு ஆண்டும் அங்கு சென்று தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அண்மையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அவர் அங்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், கோவில் நிர்வாகம் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய பத்ரி-கேதார் கோவில் கமிட்டியின் தலைவர் ஹேமந்த் திவேதி, சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்ட எவரும் கோவிலுக்கு வரலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்து அல்லாத பின்னணியைக் கொண்டவர்கள் தங்களுக்கு இந்து மதத்தின் மீது முழுமையான பற்று உள்ளது என்பதை ஒரு சட்டப்பூர்வ பிரமாணப் பத்திரம் வாயிலாக உறுதிப்படுத்தினால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் நடிகர்களான இவரது தந்தை சைஃப் அலிகான் முஸ்லிம் மற்றும் தாய் அமிர்தா சிங் இந்து என்பதால், அவர் தனது பக்தியை இவ்வாறு முறைப்படி உறுதிப்படுத்த வேண்டும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
நடிகை சாரா அலி கான் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் சமமான மரியாதை அளிப்பவர் என்றாலும், அவர் இந்து கோவில்களுக்கு அடிக்கடி செல்வது குறித்து அவ்வப்போது சில தரப்பினர் விமர்சனங்களை எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், கோவில் நிர்வாகத்தின் இந்த நேரடி நிபந்தனை இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கோவில் வளாகத்திற்குள் அமைதியைப் பேணுவதற்காக மொபைல் போன் பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு குறித்து சாரா அலி கான் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.(Online Tamil News)


