செட்டியார் எனும் சாதியை அடையாளம் காணும் நோக்கில் செட்டிநாடா? என்று பட்டிமன்ற புகழ் கேட்டதாக அவர் மீது ஆவேச பாய்ச்சலை பலரும் நிகழ்த்தி வருகின்றனர். நடந்தது என்ன?
அமெரிக்காவில் அட்லாண்டா மாநகர தமிழ்ச் சங்கம் சார்பில் கடந்த 3ம் தேதி அன்று பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. ராஜாவும் பாரதி பாஸ்கரும் தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்வுக்காக அட்லாண்டாவில் தங்கி இருந்த போது ராஜாவுக்கு உணவு கொடுத்த பெண்ணிடம், நீ என்ன செட்டியாரா? என்கிற தொனியில் கேட்டதாக அந்த பெண்ணின் அண்ணன் karthikeyan fastura தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது அவர், ‘’பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அமெரிக்க தமிழ் சங்கத்தின் அழைப்பில் அட்லாண்டா சென்றுள்ளார். அவருக்கும் அவரது சக பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்களுக்கும் அட்லாண்டா தமிழ் சங்கத்தின் சார்பாக தமிழ் உணவு தயாரித்துக் கொடுக்கும் பொறுப்பு எனது தங்கைக்கு கிடைத்தது. எனது தங்கை தனது சக தோழியர்கள் உடன் மிகச் சிறப்பான வகையில் சமைத்து எடுத்துச் சென்று இருக்கிறார்.
சிறந்த முறையில் அவர்களுக்கு உணவும் பரிமாறி இருக்கிறார்கள். பேச்சாளர் ராஜா இம்மூவரையும் சந்தித்து விசாரித்திருக்கிறார். மூவரிடமும் அவர்கள் ஊரினை விசாரித்திருக்கிறார். ஊர் பெயர் சொன்னவுடன் நீங்கள் இந்த சாதியா என்று கேட்டு இருக்கிறார்.

எனது தங்கை முறை வரும்போதும் நீங்க எந்த ஊருமா என்று கேட்டு இருக்கிறார். ஐயா நான் காரைக்குடி என்று சொல்லி இருக்கிறார். ஓ நீங்க செட்டியாரா என்று கேட்டிருக்கிறார். எனது தங்கை அமைதியாக இருக்கவும் விட்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து நீங்கள் வேற என்ன ஆளுங்க என்றும் கேட்டிருக்கிறார்.
தங்கை எதுவும் பதில் கூறாமல் அமைதியாக இருக்கவும் தான் அடுத்தவர்களிடம் கேட்டிருக்கிறார். என் தங்கை இதைக் கூறும்போது அழுகையுடன் கூறினாள்.
சாப்பாடு நல்லா இல்லை என்று சொல்லி இருந்தால் கூட நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன். அங்கு யாருக்குமே நான் என்ன சாதி என்று தெரியாது யாரும் என்னிடம் கேட்டதும் இல்லை. திடீரென்று அப்படி கேட்கவும் ஒரு மாதிரியா ஆயிடுச்சு. வாந்தி வருவது போல் உணர்ந்தேன். அழுகையும் ஆத்திரமும் அடக்கிக் கொண்டு நிற்பது ரொம்பவும் சிரமமாக இருந்தது என்றாள்.
தமிழ்நாட்டில் ஒருவர் சாதி பெயரை கேட்பது அசிங்கமான செயல் என்று படிக்காத பாமரனுக்கும் தெரியும். அவன் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினாலும் நேரடியாக கேட்க மாட்டான். படித்தவர், பட்டிமன்ற பேச்சாளர் , எண்ணற்ற மேடைகளில் பேசியிருக்கிறீர்கள், ஒவ்வொரு தீபாவளி அன்று சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் உங்களது பேச்சை ரசித்து கேட்டவர்களில் நானும் ஒருவன். என் தங்கையும் அப்படியே அதனால் தான். உங்களுக்காக விழுந்து விழுந்து சமைத்து எடுத்து கொண்டு சென்று இருக்கிறார்.

இந்த சாதி மத இன சனியன்களை விட்டு தள்ளி வாழ்வோம் என்று தான் என் தங்கை போன்றவர்கள் படித்து திறமை வளர்த்துக்கொண்டு அமெரிக்கா போன்ற நாடுகளில் செட்டில் ஆகிறார்கள். அங்கேயும் உங்களது ஈன புத்தியை கொண்டு வந்து காட்டுவீர்களா?!
ஊர் பெயரைக் கேட்டு சாதியை கண்டு கொள்ளும் மட்டமான புத்தி போகவில்லை. காரைக்குடி என்றால் செட்டியார் மட்டும்தான் இருக்கிறார்களா ? வேறு மனிதர்கள் இல்லையா ? அந்தக் கேள்விக்கு அமைதியாக இருந்த பின்னும் விடாமல் நீங்கள் வேறு என்ன ஆள் என்று கொக்கி பட வேண்டிய அவசியம் என்ன ? அப்படி சாதி அரிப்பு கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் சாதி மக்களிடம் மட்டும் பட்டிமன்ற பேச்சை நடத்துங்களேன். அமெரிக்காவில் சாதிகளை மறந்து தமிழர்களாய் இணைந்து ஒரு சங்கம் வைத்து அந்த சங்கத்திற்கு பேச கூப்பிட்டால் அங்கேயும் வந்து உங்களது சாதி வன்மத்தை தான் காட்டுவீர்களா ?!
சமைத்துக் கொடுத்தவர் என்ன சாதி என்று தெரிந்து கொள்வதில் அப்படி என்னயா ஆர்வம் ? உங்க நல்ல நேரம் என்னை போன்றவர்களிடம் நீங்கள் சிக்காமல் போனீர்கள். சிக்கி இருந்தீர்கள் என்றால் உங்களது சாதி வன்மத்தை தோல் உரித்து மூஞ்சியில் அடித்தார் போன்று நாக்க புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டிருப்பேன்.
இன்னொரு முறை பட்டிமன்றம் என்று எங்கும் சென்றுவிட வேண்டாம். அந்தத் தகுதி உமக்கு இல்லை. மீறி வந்தால் அசிங்கப்பட்டு போவீர்கள்.’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

இதையடுத்து இந்த விவகாரம் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதற்கு ராஜா விளக்கம் அளித்திருக்கிறார். அந்த வீடியோவில், ‘’மிகுந்த மன வலியுடன் பேசுகிறேன். நான் சாதிபற்றி விசாரிப்பேனா? எந்த காலத்திலும் நான் அப்படி இருந்தது இல்லை. அது மாதிரி நான் நடந்துகொண்டதாக தெரியவில்லை. தவறான புரிதல் இருந்தால் கருத்துக்களை மாற்றிக்கொள்ளுங்கள். உணவு சுவையாக இருந்ததால் இது செட்டிநாடு உணவா? என்று கேட்டதாகத்தான் நினைவு இருக்கிறது. அவரின் சாதி, சமூகம் குறித்து கேட்கும் அளவுக்க்கு சின்ன புத்தி எனக்கு இல்லை’’ என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
ராஜாவின் குருநாதர் சாலமன் பாப்பையாவும், ராஜா அப்படிப்பட்டவர் அல்ல . அப்படி பேசியிருக்க மாட்டார் என்று சத்தியம் செய்து சொல்கிறார்.
.



