மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, சமூக வலைதளங்களில் தவறான மற்றும் போலியான வீடியோக்களைப் பரப்பியதாக 19 இந்தியர்கள் உட்பட மொத்தம் 35 பேரை கைது செய்ய ஐக்கிய அரபு அமீரக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமீரக அரசு நடத்திய தீவிர டிஜிட்டல் கண்காணிப்பில், பிடிபட்டவர்கள் மூன்று வெவ்வேறு குழுக்களாகச் செயல்பட்டு வதந்திகளைப் பரப்பியது கண்டறியப்பட்டுள்ளது.

முதல் குழுவினர் வான்பரப்பில் ஏவுகணைகள் இடைமறிக்கப்படும் உண்மையான வீடியோக்களுடன் அச்சமூட்டும் ஒலிகளைச் சேர்த்துப் பகிர்ந்து பீதியை ஏற்படுத்தியுள்ளனர்; இரண்டாம் குழுவினர் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமீரகத்தில் தாக்குதல் நடப்பது போன்ற போலியான காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.

மேலும் மூன்றாம் குழுவினர் அமீரகத்திற்கு எதிராகச் செயல்படும் நாட்டைப் புகழ்ந்தும் வதந்திகளைப் பரப்பியும் வந்துள்ளனர். இத்தகைய செயல்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதால், இவர்களுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் திர்ஹாம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமீரக தலைமை வழக்கறிஞர் எச்சரித்துள்ளார்.(Online tamil News)


