அமமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜா இன்று அமமுகவில் இருந்து வெளியேறி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன், அமமுக தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் வினோத், குமரி மேற்கு மாவட்டச் செயலாளர் ஸ்டெல்லஸ், குமரி மத்திய மாவட்டச் செயலாளர் ரத்னராஜ் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.
டிடிவி தினகரனுக்கு 25 ஆண்டுகால நண்பர் மாணிக்கராஜா. தென் மாவட்ட அமமுகவுக்கு முக்கிய முகமாக இருந்தவர் மாணிக்கராஜா. இவருக்கு தினகரன் அளித்த முக்கியத்துவத்தை பார்த்துதான் தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா உள்ளிட்டவர்கள் அமமுகவில் இருந்து வெளியேறினர். இப்போது மாணிக்கராஜாவே வெளியேறிவிட்டார்.

இது குறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கராஜா, ‘’அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எதற்காக தொடங்கப்பட்டது? அதிமுகவை மீட்கத்தான் அமமுக உருவாக்கப்பட்டது. அதற்காக 8 ஆண்டுகாலம் கஷ்டப்பட்டு வளர்த்த அமமுகவை மறுபடியும் பழைய நிலைக்கு கொண்டு சென்றுவிட்டார் டிடிவி தினகரன்.
அதிமுக தலைமை வகிக்கும் என்.டி.ஏ. கூட்டணி வேண்டாம் என்று நான் உள்பட நிர்வாகிகள் பலரும், தொண்டர்களும் பலமுறை எடுத்துச்சொல்லியும் அதை கேட்காமல், தலைமை முடிவெடுத்த காரணத்தால் மன வருத்தத்துடன் வெளியேறினேன். என்னுடன் மூன்று அமமுக மாவட்டச் செயலாளர்களும் வந்துள்ளனர். கூடிய விரைவில் நிறைய நிர்வாகிகள் வெளியேறி வருவார்கள்.
நல்லாட்சி கொடுக்கக்கூடிய முதலமைச்சரின் கழகத்தில் இணைந்து பணியாற்ற வந்துள்ளோம்’’ என்றார்.



