சுய அரசியல் காரணங்களுக்காக இந்தியாவின் ஒரு மாநிலம் ஆண்டுக்கணக்கில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அந்த மாநிலம், மணிப்பூர். அங்குள்ள இரு சமூகத்திற்கிடையே மதரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் ஏற்பட்ட மோதல்களே இதற்கான காரணமாகும். 2023ஆம் ஆண்டு மணிப்பூரில் நடந்த வன்முறைகளும், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களும் இந்தியாவை மட்டுமின்றி, உலகநாடுகள் பலவற்றையும் அதிரவைத்தன. அப்போது மணிப்பூரின் முதலமைச்சராக இருந்தவர் பா.ஜ.க.வை சேர்ந்த பிரேன் சிங். குக்கி என்கிற சமூகத்திற்கு எதிராக மதக்கண்ணோட்டத்தின் அடிப்படையில் பா.ஜ.க. அரசு செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் செல்லவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
உலக நாடுகளுக்கு பயணம் செல்ல நேரமிருந்த பிரதமருக்கு தன் நாட்டின் சொந்த மாநிலத்திற்கு செல்ல நேரம் கிடைக்கவில்லை. தவிர்த்தே வந்தார். எதிர்க்கட்சியினர் மணிப்பூருக்கு செல்லவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும், இந்தியா கூட்டணியின் சார்பில் அதன் தலைவர்கள் மணிப்பூருக்கு சென்று மக்களை சந்தித்தனர். காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி நேரில் மணிப்பூர்(Manipur) சென்று மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் மணிப்பூரில் பா.ஜ.க. தோல்வியடைந்தது. மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி இருந்தாலும், எம்.பி. தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வியின் விளைவாக, கலவரங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய கவனமும் தேவையும் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஏற்பட்டது. கலவரத்தைத் தூண்டும் வகையில் முதல்வர் பிரேன் சிங் பேசியதாக ஓர் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான நீதிமன்ற விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், உள்கட்ச பூசல்களும் சேர்ந்ததால், மணிப்பூர் சட்டமன்றத்தை முடக்கி, குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது.
கலவரம் தொடர்பாக பா.ஜ.க. முதலமைச்சர் மீதே குற்றச்சாட்டு எழுந்ததால், ஆட்சியைக் கலைத்துவிட்டு, சட்டமன்றத் தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. பா.ஜ.க.வின் கணக்கு வேறாக இருந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி மணிப்பூருக்கு வந்தார். வழக்கம்போல, தன்னை புரமோட் செய்யும் வகையில் கவனம் செலுத்தினார். மணிப்பூரின் உண்மையானப் பிரச்சினையைப் பின்னுக்குத் தள்ளுவதையே பா.ஜ.க. ஒரு செயல்பாடாக மேற்கொண்டு வந்தது. பற்றி எரியும் மணிப்பூர் விவகாரத்தில் கவனம் செலுத்துவதைவிட, மாநில பா.ஜ.க.வுக்குள் நிலவிவரும் பூசல்களை சரி செய்வதிலேயே அதன் தேசியத் தலைமை அதிக கவனம் செலுத்தியது. (Online Tamil News)
பிரேன் சிங் தலைமையிலான அமைச்சரவையின் சட்டமன்றம் முடக்கப்பட்டிருந்த நிலையில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களைத் தலைவராக யும்நாம் கேம்சந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதாவது, அவர்தான் முதல்வர் பதவிக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சொந்தக் கட்சியின் பூசல்களைத் தீர்த்துவிட்டதால், மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. புதிய முதலமைச்சராக கேம்சந்த் பதவியேற்றார். பா.ஜ.க. அரசு மீண்டும் பதவியேற்ற நாள் முதல் மணிப்பூர் மீண்டும் பற்றி எரிகிறது. குக்கி சமூகத்தினரிடம் அச்சமும் பாதுகாப்பின்மையும் வெளிப்படுகிறது. அது உள்ளூர் மோதல்களை அதிகமாக்கி வருகிறது. பிப்ரவரி 8, 9 ஆகிய நாட்களில் உக்ருல் மாவட்டத்தில் பழங்குடியினத்தவர்களான குக்கி சோ மற்றும் நாகா சமூகத்திற்கிடையே தொடர்ச்சியான மோதல்கள் ஏற்பட்டு, இருதரப்பிலும் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளன.(Manipur Violence)
மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கம் உக்ருலுக்கும் இடையில் நடந்த வன்முறைகளில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் இம்பால் மண்டல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களை முதல்வர் கேம்சந்த் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். அமைதி திரும்ப வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அந்த அமைதி வெறும் சொற்களால் உருவாகிவிடாது. மணிப்பூர் துணை முதலமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பந்தப்பட்ட இரு தரப்பின் தலைவர்களையும் அழைத்து சமாதானக் கூட்டம் நடத்தி முடித்துவிட்டுத் திரும்பிய பிறகுதான் இந்த வன்முறை வெடித்துள்ளது. அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் தீ வைத்ததாகவும், கடுமையான காற்று வீசியதால் அது அடுத்தடுத்த வீடுகளுக்குப் பரவிவிட்டதாகவும் மனிப்பூர் அரசு நிர்வாகம் தெரிவிக்கிறது. உக்ருல் மாவட்டத்தில் மக்கள் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் துணை ராணுவப்படை, அசாம் ரைஃபிள்ஸ், அதிரடிப் படை உள்ளிட்ட பலவும் களமிறக்கப்பட்டுள்ளன.



