வடகொரியாவின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னுக்குப் பிறகு அந்நாட்டை ஆளப்போகும் அடுத்த வாரிசு யார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. கிம் ஜாங் உன்னின் 13 வயது மகள் கிம் ஜூ ஏ, அந்நாட்டின் அடுத்த உயரிய தலைவராக அதிகாரப்பூர்வமாகத் தயார் செய்யப்பட்டு வருவதாகத் தென்கொரிய உளவு அமைப்பான என்.ஐ.எஸ் (NIS) தெரிவித்துள்ளது.

இதுவரை வாரிசுப் பயிற்சிக் கட்டத்தில் இருந்த அவர், தற்போது “வாரிசு நியமன நிலை” என்ற அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் கிம் வம்சத்தின் நான்காவது தலைமுறை ஆட்சியை உறுதிப்படுத்தும் நோக்கில், பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆளும் தொழிலாளர் கட்சி மாநாட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள், ராணுவ அணிவகுப்புகள் மற்றும் முக்கிய ஆயுதக் கிடங்கு திறப்பு விழாக்கள் என அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் கிம் ஜூ ஏ தனது தந்தையுடன் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சமீபத்தில் சீனாவில் நடந்த ராணுவ அணிவகுப்பில் அவர் பங்கேற்றது, அவருக்கு சர்வதேச அளவில் ஒரு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. மேலும், வடகொரியாவில் அவரது புகைப்படங்கள் அடங்கிய அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டிருப்பதும், அந்நாட்டு மக்கள் யாரும் அவர் வைத்திருக்கும் அதே பெயரைச் சூட்டிக்கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதும், அவர் ஒரு மிகச்சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்து வருவதை உறுதிப்படுத்துகின்றன.

வடகொரிய வரலாற்றில் இதுவரை கிம் வம்சத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்துள்ளனர். ஒருவேளை கிம் ஜூ ஏ அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டால், வடகொரியாவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெறுவார். கிம் ஜாங் உன்னுக்கு ஒரு மூத்த மகன் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவர் இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. மாறாக, தனது மகளை மட்டும் உலகிற்கு அறிமுகப்படுத்தி, அவருக்குத் தேவையான ராஜதந்திர மற்றும் ராணுவப் பயிற்சிகளை கிம் ஜாங் உன் நேரிடையாக வழங்கி வருகிறார்.(Online Tamil News)


