அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதன் நேரடி பாதிப்பாக பாகிஸ்தானில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தினால் விலை உயர்வைத் தவிர்க்க முடியவில்லை என்று அந்நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சர் அலி பர்வேஸ் மாலிக் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், இந்த விலை உயர்வுக்கு 3 எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு பெட்ரோல் விலையைச் சமீபத்தில் சற்று குறைத்திருந்தது.
இந்தச் சூழலில், நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிப்பது குறித்து பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நாடு முழுவதும் நேற்று முதல் ‘பகுதி நேர பொது முடக்கம்’ (Partial Lockdown) அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, எரிபொருள் மற்றும் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் இரவு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பாகிஸ்தான் முழுவதும் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் இரவு 10 மணிக்கு மேல் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதால், பாகிஸ்தான் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.(Online Tamil News)


