கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவ மிஷனரிகள் இந்தியாவில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அனாதை ஆசிரமங்கள் தொழுநோயாளர்களுக்கான விடுதிகள் போன்றவற்றை நடத்துகின்றன. அவற்றின் சொத்துக்களைக் கைப்பற்ற நினைக்கிறதா பாஜக?
FCRA Amendment Bill 2026 என்ற புதிய சட்டத் திருத்தத்தை கடந்த மார்ச் 25, 2026 அன்று ஒன்றிய பாஜக அரசு அறிமுகப் படுத்தியுள்ளது. வெளிநாட்டிலிருந்து தனி மனிதர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசுகள் இந்தியர்களுக்கு நிதியுதவி வழங்குவதை இந்த சட்டம் முறைப்படுத்துகிறது. ஆண்டு தோறும் 16,000 என்.ஜி.ஓ.க்களுக்கு 22,000 கோடி ரூபாய் நிதி வருவதாக ஒன்றிய அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்ன?
வெளிநாட்டில் இருந்து நிதியுதவி பெறும் NGOக்களை தேச நலன் கருதி கட்டுப்படுத்த வேண்டியுள்ளது என்று ஒன்றிய அரசு கூறுகிறது. இந்த NGOக்கள் தங்கள் உரிமத்தை குறிப்பிட்ட கெடுவுக்குள் புதுப்பிக்காவிட்டால், அல்லது அனுமதி மறுக்கப்பட்டால் அவற்றின் உரிமம் உடனடியாக ரத்தாகும் என்று இந்த மசோதா கூறுகிறது.அப்படி ரத்து ஆனால் உடனடியாக அவற்றின் சொத்துக்கள் அரசுடமையாகும். இதற்ககென ஒன்றிய அரசு ஒரு கட்டுப்பாட்டு அதிகாரியை (Designated Authority) நியமிக்க உள்ளது.
உதாரணத்திற்கு வேலூரிலுள்ள சி.எம்.சி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த மருத்துவச் சேவை வழங்குவதோடு நாட்டின் தலைசிறந்த மருத்துவர்களையும் உருவாக்கியுள்ளது. இப்போது இந்த சட்டம் அமலுக்கு வந்தால் சி.எம்.சி.யின் சொத்துக்கள் அனைத்தையும் அரசு உடனடியாகப் பறிமுதல் செய்யலாம்.
இந்த சட்டத் திருத்தம் எதனால் ஆபத்தானது?
நமது அரசியலமைப்பு சட்டப்படி தனியார் சொத்துக்கள் எதை வேண்டுமானாலும் தேச நலனுக்காக அரசு கையகப்படுத்தலாம். அதை முறைப்படுத்த கடந்த 2013ஆம் ஆண்டு LARR Act கொண்டு வரப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம் . நெடுஞ்சாலைகள், அணைகள், சிப்காட், விமான நிலையம் என எந்த திட்டமாக இருந்தாலும் அதற்கான நில உரிமையாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பி, கருத்து கேட்டு, உரிய இழப்பீட்டுத் தொகை (சந்தை மதிப்பிலிருந்து 4 மடங்கு வரை) கொடுத்து தான் கையகப்படுத்த முடியும்.
ஆனால், இந்த புதிய சட்டத் திருத்தத்தின் படி நோட்டீஸ், கேள்வி எதுவும் இல்லாமல் அனுமதி ரத்தான அந்த நாளிலிருந்து குறிப்பிட்ட அதிகாரியின் கட்டுப்பாட்டிற்கு கீழ அந்த அமைப்பின் சொத்துக்கள் தானாக வந்து விடும். இதன் மீது ஏதேனும் குறை இருந்தால் பாதிக்கப்பட்ட நபர்/நிறுவனம் 90 நாட்களுக்குள் மாவட்ட நீதிபதியிடம் முறையிடலாம்.
இது இயற்கை நீதி கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானது. ஒரு நபரின் உரிமையை பாதிக்கும் நடவடிக்கையை எடுக்கும் முன் அவரின் கருத்தைக் கேட்க போதிய அவகாசம் வழங்க வேண்டும். ஆனால், “நான் நடவடிக்கை எடுப்பேன். வேண்டுமானால், நீ நீதிமன்றத்துக்கு போ” என ஒரு குடிமகனை விரட்டுவது மக்களாட்சி குடியரசின் விழுமியங்களுக்கு எதிரானது, எதேச்சதிகாரத் தன்மை உடையது.(Online Tamil News)
அரசியலமைப்பு சட்டத்தை துளி கூட மதிக்காத பாஜக அரசு சிறுபான்மை மதத்தினர் நடத்தும் நிறுவனங்களை மிரட்டும் நோக்கத்துடன் கொண்டு வந்துள்ள இந்த FCRA சட்டத் திருத்தத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்தைப் போலவே இதுவும் சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது என்று நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.



