மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள துரோங்லோபி அவாங் லெய்காய் கிராமத்தில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள் ஒரு வீட்டின் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலின் போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் மற்றும் அவனது ஐந்து மாத தங்கை ஆகிய இரண்டு பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தைகளின் தாய் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தத் துயரமான சம்பவத்தைக் கேள்விப்பட்ட கிராம மக்கள் ஆத்திரமடைந்து வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது குறைந்தது மூன்று லாரிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன மற்றும் பல இடங்களில் சாலை மறியல் செய்யப்பட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

மேலும் தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே வெடிக்காத நிலையில் ஒரு ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டது மக்களிடையே கூடுதல் பீதியை ஏற்படுத்தியது.

மேலும், பதற்றம் அதிகரிப்பதையும் வதந்திகள் பரவுவதையும் தடுக்க மணிப்பூர் அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால், கக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களில் இன்று மதியம் முதல் மூன்று நாட்களுக்கு இணைய சேவைகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. மொபைல் டேட்டா மற்றும் பிராட்பேண்ட் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.(Online Tamil News)


