ஆந்திரப் பிரதேசத்தின் மார்காபுரம் அருகே இன்று அதிகாலை நடந்த பேருந்து விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தெலங்கானாவின் ஜக்தியல் பகுதியிலிருந்து நெல்லூர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த தனியார் பேருந்து, எதிரே வந்த டிப்பர் லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.மோதிய சில நொடிகளில் பேருந்து தீப்பற்றி எரிந்ததால், உள்ளே இருந்த பயணிகள் பலர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்ட நிலையில், தீ வேகமாக பரவியதால் சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் எரிந்து நாசமாகியது.
இதனையடுத்து, இவ்விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து என்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீ அணைக்கப்பட்ட பிறகு, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். பலர் தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் அதிக வேகம் மற்றும் ஓட்டுநரின் கட்டுப்பாடு இழப்பு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.(Online Tamil News)


