ஈரானில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் நடத்திய பிரம்மாண்ட போராட்டத்தைத் தொடர்ந்து, அதில் கைது செய்யப்பட்ட முகமது அமீன் பிக்லாரி மற்றும் ஷாஹின் வஹேதி ஆகிய இரண்டு இளைஞர்களுக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய ராணுவ மையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அங்கிருந்த ஆயுதக் கிடங்கிற்குள் நுழைய முயன்றதாகவும் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஈரான் அரசுத் தரப்பில் இவர்கள் இருவரும் ராணுவ ரகசியங்களைத் திருட முயன்ற எதிரி நாட்டு ஏஜெண்டுகள் என்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஈரான் அரசு போராட்டக்காரர்களுக்கு எதிராக எடுத்து வரும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முன்னதாக, ஏப்ரல் 2-ம் தேதி 18 வயது இளைஞரான அமீர்ஹொசைன் ஹடாமி என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதேபோல், மார்ச் மாத இறுதியில் அக்பர் தனேஷ்வர்கர், முகமது தக்வி சங்க்டேஹி, பூயா கோபாடி பூஸ்தானி மற்றும் பாபக் அலிபூர் ஆகியோருக்கும் இதே போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தற்போது நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், ஈரான் அரசு தனது நாட்டின் போராட்டக்காரர்களைத் தூக்கிலிட்டு வருவதை மனித உரிமை அமைப்புகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. இது தொடர்பாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், இந்தப் போராட்டங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மேலும் 11 பேர் உடனடியாகத் தூக்கிலிடப்படும் அபாயத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், தண்டிக்கப்பட்ட அனைவரும் சித்திரவதை செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாகப் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.(Online Tamil News)


