ஈரான் தலைநகர் தெஹ்ரானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இஸ்லாம்ஷார் (Eslamshahr) என்ற குடியிருப்புப் பகுதி மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரே கட்டிடத்தில் வசித்து வந்த 6 குழந்தைகள் உட்பட மொத்தம் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரானுக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் கடும் போர் பதற்றத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ நிலைகளைக் குறிவைத்துத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

குடியிருப்புப் பகுதிகள் மட்டுமின்றி, தெஹ்ரானில் உள்ள புகழ்பெற்ற ஷெரீப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் அருகிலுள்ள இயற்கை எரிவாயு மையமும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஈரானின் புனித நகரமான கோமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதல்களின் மிக முக்கிய நிகழ்வாக, ஈரானிய புரட்சிகர காவல் படையின் (IRGC) உளவுப் பிரிவுத் தலைவரான மேஜர் ஜெனரல் மஜித் காதெமி கொல்லப்பட்டதை ஈரான் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்குப் பதிலடியாக ஈரான் தரப்பிலிருந்து இஸ்ரேலின் ஹைஃபா நகர் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டதில் அங்கேயும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.(Online Tamil News)


