தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 7,454 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் தலைநகர் சென்னையில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை அளித்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 9-ம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதும் தேர்தல் களம் இன்னும் விறுவிறுப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பவர் ‘லாட்டரி கிங்’ என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின். திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள இவர், தமிழகத்திலேயே மிகப்பெரிய பணக்கார வேட்பாளராக உருவெடுத்துள்ளார். இவர் சமூகப் பணிகளில் முனைவர் பட்டமும், இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில், மிகவும் அதிகப்படியான பக்கங்களைக் கொண்ட (164 பக்கங்கள்) சொத்து விவரப் பட்டியலை இவர் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் மிக முக்கியமான கோடீஸ்வர வேட்பாளராக அவர் உருவெடுத்துள்ளார்.
சொத்து விவரங்களைப் பொறுத்தவரை, லீமா ரோஸிடம் 139.63 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 909.94 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகளும் உள்ளன. அவரது கணவர் மார்ட்டின் பெயரில் 3,262 கோடி ரூபாய் அசையும் சொத்துகளும், 887.36 கோடி ரூபாய் அசையா சொத்துகளும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகை விவரங்களில், லீமா ரோஸ் வசம் 19 கிலோ தங்கம், 1,217 கேரட் வைரம், 13 கிலோ வெள்ளி மற்றும் 33 கிராம் பிளாட்டினம் உள்ளது. அதேபோல் அவரது கணவர் பெயரில் 281 கிராம் தங்கம், 9.83 கேரட் வைரம், 21 கிலோ வெள்ளி மற்றும் 321 கிராம் மதிப்பிலான முத்துக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையிருப்புத் தொகையாக லீமா ரோஸ் பெயரில் 5.52 லட்ச ரூபாயும், அவரது கணவர் பெயரில் 56.48 லட்ச ரூபாயும் காட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழக வேட்பாளர்கள் பட்டியலிலேயே சொத்து மதிப்பில் இவர் முதலிடத்தில் இருக்கிறார்.
மேலும், தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் லீமா ரோஸ் மருமகனான ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில்
ரூ.17.49 கோடி அசையா சொத்துக்களும், ரூ.180 கோடி அசையும் சொத்துக்களும் கையிருப்பு ரொக்கம் ரூ.1.69 கோடி மற்றும் வங்கி இருப்பு ரூ.17.53 கோடி என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.(Online Tamil News)


