தவெக-வின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராகச் செயல்பட்டு வரும் ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் ரஜினிகாந்தின் அரசியல் பின்வாங்கல் குறித்துப் பேசுகையில், “திமுக குடும்பத்தினர் கொடுத்த அழுத்தத்தாலும் மிரட்டலாலும் தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை” என்று ஒரு கருத்தைக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு முற்றிலும் உண்மைக்கு மாறானது என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.மேலும், தான் அரசியலில் இருந்து விலகியதற்குக் காரணம் தனது உடல்நிலை மற்றும் அக்காலகட்டத்தில் இருந்த கொரோனா சூழல் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், தனது புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களைப் பரப்பிய ஆதவ் அர்ஜுனாவிற்குப் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, திருமாவளவன் போன்ற தலைவர்களுக்கும், தன் பக்கம் நின்ற ரசிகர்களுக்கும் ரஜினிகாந்த் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இறுதியாக, “காலம் பேசாது… ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்று அவர் குறிப்பிட்டது, வீணான வதந்திகளைப் பரப்புவோருக்கு அவர் கொடுத்த ஒரு முதிர்ச்சியான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)


