உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஹரிஷ் ராணா கடந்த 2013-ம் ஆண்டு சண்டிகரில் தங்கும் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த நிலையில், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக கடந்த 13 ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாக இருந்தார்.

அவரது மூளை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், அவரால் பேசவோ, அசையவோ அல்லது சுயமாகச் சுவாசிக்கவோ முடியாத நிலையில்’ (Permanent Vegetative State) இருந்து வந்தார். குழாய் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்த நிலையிலும், எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்ததில் அவர் மீண்டும் குணமடைய வாய்ப்பே இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. தனது மகனின் இந்தத் துயர நிலையைப் பார்க்க முடியாத அவரது பெற்றோர், அவர் கண்ணியமாக இறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்திய அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவின்படி ஒரு மனிதனுக்குக் கண்ணியமாக வாழ உரிமை இருப்பது போலவே, மீள முடியாத மருத்துவ நிலையில் இருக்கும் ஒருவருக்குக் கண்ணியமாக இறப்பதற்கும் உரிமை உண்டு என்று குறிப்பிட்டனர்.

மருத்துவர்களின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ஹரிஷ் ராணாவுக்கு வழங்கப்பட்டு வரும் செயற்கை உயிர் காக்கும் கருவிகள் மற்றும் உணவுக் குழாய்களை அகற்றி ‘செயலற்ற கருணைக்கொலை’ (Passive Euthanasia) செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்தியாவில் இது போன்ற ஒரு சூழலில் தனிநபர் ஒருவருக்குக் கருணைக்கொலை செய்ய அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 2018-ம் ஆண்டு அருணா சான்பாக் வழக்கில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.(Online Tamil News)


