மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஒரு மரணம், தற்போது திட்டமிட்ட கொலை என்பது அம்பலமாகியுள்ளது.

சந்திராப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரி ஜெயந்த் பல்லவார் (Jayant Ballawar), கடந்த 2023 ஏப்ரல் 25-ம் தேதி பணிக்குச் செல்லும் வழியில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அப்போது அது ஒரு சாதாரண உடல்நலக் குறைவால் ஏற்பட்ட மரணம் என்று கருதப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது. ஆனால், தற்போது அவரது மகளான பெண் காவலர் ஆர்யா (Arya) தனது தந்தையை விஷம் வைத்துக் கொன்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆர்யா, ஆஷிஷ் ஷெட்மேக் (Ashish Shedmake) என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு தந்தை ஜெயந்த் பல்லவார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் தனது காதலுக்குத் தடையாக இருந்த தந்தையைத் கொலை செய்ய ஆர்யா திட்டமிட்டார். இதற்காக தனது உறவினர் சைதன்யா கெடம் (Chaitanya Gedam) என்பவருக்கு 5,000 ரூபாய் பணம் கொடுத்து விஷம் வாங்கிக் கொடுத்துள்ளார். சம்பவத்தன்று காலை, ஆர்யா தனது தந்தை பணிக்குக் கிளம்பும் போது அவருக்கு மில்க் ஷேக் கொடுத்துள்ளார். அதில் ஆர்யா ஏற்கனவே விஷத்தைக் கலந்து வைத்திருந்தார். அந்த மில்க் ஷேக்கை குடித்துவிட்டு அலுவலகம் சென்ற ஜெயந்த் பல்லவார், அங்கு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ஜெயந்த் பல்லவாரின் மறைவுக்குப் பிறகு ஆர்யாவும் ஆஷிஷும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. இந்த மோதலின் உச்சகட்டமாக, கடந்த வாரம் ஆஷிஷ் காவல் நிலையம் சென்று தனது மனைவி ஆர்யா செய்த கொலையை ஒப்புக்கொண்டார். இதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி ஆர்யா, ஆஷிஷ், சைதன்யா மற்றும் விஷம் வழங்கிய மற்றொரு நபர் என நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.(Online Tamil News)


