எனக்கு இன்னொரு முகம் இருக்கு, அது உனக்கு தெரியும் என்று செங்கோட்டையனை கோபி பிரச்சாரத்தில் மிரட்டி இருந்தார் எடப்பாடி பழனிசாமி. உறவினர் கொலை வழக்கிலும், கொடநாடு கொலை, கொள்ள வழக்கிலும் எடப்பாடி பழனிசாமியை பலரும் தொடர்புபடுத்தி பேசி வரும் நிலையில் அதை ஒப்புக்கொள்வது மாதிரி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து அதிமுக முன்னாள் எம்.பி . கே.சி.பழனிசாமி, ‘’எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எவ்வளவு பெரிய பண்பாளர்களாக, பொதுவெளியில் நாகரிகம் கடைபிடிப்பவர்களாக செயல்பட்டார்கள் என்பது உலகறியும். ஆனால் கோபியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆற்றிய வீர உரையில் ஒரு நான்காம் தர பேச்சாளரை போல பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆனால் தன்னை அறியாமல் அதில் இரண்டு உண்மைகளை அவர் சொல்லியிருக்கிறார்.

முன்னாள் அமைச்சர்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் சொத்துக்கள் போன்ற ரகசிய குறிப்புகள் கோடநாட்டில் இருந்தது . அதை எடுக்க எடப்பாடி பழனிசாமி கூலிப்படை அனுப்பினார் என்பது தான் அவர் மீது இருந்த குற்றச்சாட்டு. ஆனால் எடப்பாடி இன்றைக்கு அவரே அதை ஒப்புக்கொள்கிறார்.
தான் முதலமைச்சராக இருந்தபோதே செங்கோட்டையன் உட்பட பலரது ரகசியங்களை எடுத்து வைத்திருக்கிறேன் என்கிறார். அவரது இந்த கூற்று கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் அவருக்கு தொடர்பு இருக்கிறதோ என்கிற அச்சத்தை கொடுக்கிறது.

முதல்வர் ஸ்டாலினும் ஆட்சிக்கு வந்த உடனே கொடநாடு கொலை வழக்கு விசாரிக்கப்படும் என்றார், ஆணையம் அமைக்கப்படும் என்றார். ஐந்தாண்டு காலம் முடிந்துவிட்டது ஒன்றும் நடக்கவில்லை. அதேபோல் 90 நாட்களில் முன்னாள் ஊழல் அமைச்சர்களை கைது செய்வேன் சிறையில் அடைப்பேன் என்று வீர வசனம் பேசிய ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட எந்த அமைச்சர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் மூலம் இவர்களுக்கும் முதல்வர் ஸ்டாலினுடன் நெருக்கமான உடன்பாடு இருப்பது தெரிகிறது.

அதேபோல தனக்கு இன்னொரு முகம் இருப்பதாக எடப்பாடி பேசியது இதற்கு முன்பு அவரது உறவினர் கொலை வழக்கில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதை குறிப்பிட்டு சொல்லுகிற தொணியில் உள்ளது’’ என்கிறார். மேலும், ‘’இதன்பிறகாவது எடப்பாடி பழனிசாமி சற்று நாகரீகத்தோடும், நாவடக்கத்தோடும் பேச முயற்சிக்க வேண்டும்.‘’ என்று அறிவுறுத்துகிறார்.



