பாகிஸ்தானில் ஒரே சிரிஞ்சைப் பயன்படுத்தி பல குழந்தைகளுக்கு ஊசி போட்ட மெத்தனத்தால், 331 அப்பாவி சிறுவர்கள் எச்.ஐ.வி (HIV) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் டான்சா நகரில் உள்ள THQ அரசு மருத்துவமனையில் இந்த சுகாதாரச் சீர்கேடு அரங்கேறியுள்ளது. இந்த விவகாரம் முகமது அமீன் என்ற எட்டு வயது சிறுவன் உயிரிழந்த பிறகுதான் வெளிச்சத்திற்கு வந்தது என்றும் அவனது மரணத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனையில், அவனது சகோதரிக்கும் எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்றும் இவர்களின் தாய் தனது குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதுதான் இந்தத் தொற்று பரவியதாகப் புகார் அளித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விரிவான ஆய்வில், நவம்பர் 2024 முதல் அக்டோபர் 2025 வரையிலான ஓராண்டு காலத்தில் மட்டும் 331 குழந்தைகள் இந்த கொடிய நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள், ஊசியின் முனையை (Needle) மட்டும் மாற்றினால் போதாது என்றும், ஊசியின் அடிப்பகுதியான பிளாஸ்டிக் குழாய் (Barrel) வழியாகவும் வைரஸ்கள் எளிதாகப் பரவக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர். ஒரு தனியார் மருத்துவர் மூலம் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்தச் சம்பவம், தற்போது பாகிஸ்தான் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டிய அரசு மருத்துவமனையே இவ்வளவு பெரிய சுகாதாரக் கேட்டை விளைவித்திருப்பது அந்நாட்டு சுகாதாரத் துறையின் நம்பகத்தன்மை குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.(Online Tamil News)


