தென் கொரியாவைச் சேர்ந்த 22 வயதான Kim Jung-youn உலகின் இளம் தொழில்நுட்ப பெண் கோடீஸ்வரர்களில் ஒருவராக கவனம் பெற்றுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்ட Forbes இதழின் தகவலின்படி, இளம் வயதிலேயே மிகப்பெரிய செல்வத்தை பெற்றவர்களில் இவர் முக்கியமானவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர், உலகளவில் பிரபலமான ஆன்லைன் கேமிங் நிறுவனமான Nexon நிறுவனத்தை நிறுவிய மறைந்த Kim Jung-ju அவர்களின் மகளாவார். தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவரது நிறுவன பங்குகள் மற்றும் சொத்துக்கள் வாரிசாக இவருக்கும் அவரது சகோதரிக்கும் கிடைத்ததால், கிம் ஜுங்-யூன் கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெற்றார்.
அவரது செல்வம் பெரும்பாலும் குடும்ப வாரிசு மூலமாக வந்திருந்தாலும், இளம் வயதில் உலகளவில் பேசப்படும் தொழில்நுட்ப செல்வந்தர்களில் ஒருவராக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும், அவர் மற்றும் அவரது சகோதரி இருவரும் நிறுவனத்தின் தினசரி நிர்வாக நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டு வரவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், 30 வயதிற்குட்பட்ட கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருவதாகவும், அதில் பெரும்பாலானோர் வாரிசு வழியாக செல்வந்தர்களாக மாறியவர்கள் என்பதும் Forbes அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, இளம் வயதிலேயே பெரும் செல்வத்தைப் பெற்றுள்ள கிம் ஜுங்-யூன், உலக தொழில்நுட்ப துறையில் கவனிக்கப்படும் புதிய தலைமுறை செல்வந்தர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார்.(Online Tamil News)


