அரசியல் மேடைகளில் அனல் தெறிக்கும் என்பதால் இலக்கிய மேடையில் தென்றல் காற்றைத் தேடியும் நாடியும் செல்லக்கூடிய ரசிகர்கள்-வாசகர்கள் நிறைய பேர் உண்டு. இலக்கிய மேடைகளிலும் அரசியல் மேடைகளிலும் பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய இரட்டைத் திறமை படைத்த பேச்சாளர்களும் உண்டு. அரசியலில் ஈடுபட்டபடியே இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்த அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்களும், இலக்கியப் படைப்பாற்றலுடன் அரசியல் மேடைகளில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட ஜெயகாந்தன் போன்றவர்களும் தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.
இப்போதும் இலக்கியவாதிகள் அரசியலில் பதவிகளைப் பெற்றிருக்கிறார்கள். தி.மு.க எம்.பி.க்களான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், சல்மா ஆகியோர் கவிஞர்களாகவும் எழுத்தாளர்களாகவும் பல படைப்புகளைத் தந்தவர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யான சு.வெங்கடேசன் தனது காவல் கோட்டம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்டவர். இவர்கள் தங்களுக்கு விருப்பமான கட்சியில் இணைந்து, அதில் செல்வாக்கு பெற்று, பதவிக்கு வந்திருக்கிறார்கள். தாங்கள்தான் இலக்கியத்தை வளர்ப்பவர்கள் என்று இவர்கள் சொல்வதில்லை. அப்படி சொல்வது உண்மையுமல்ல, மக்களும் நம்பமாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.
இலக்கியத்தில் மட்டுமே ஊறித் திளைத்துக் கிடப்பவர்கள் அது மட்டுமே உலகம் என்றும், அங்கே தாங்கள் முன்வைக்கும் கருத்துகளேதான் அரசியல் என்றும் நினைத்துக்கொள்ளும் போக்கு அண்மைக்காலத்தில் மிக வேகமாக வளர்ந்துள்ளது. அரசியலில் இந்தக் கட்சிக்கு அந்தக் கட்சி எதிரி என்பதுபோல, இலக்கியத்தில் இந்த படைப்பாளருக்கு அந்த படைப்பாளர் எதிரி என்றும், இந்தப் படைப்பாளருடன் இன்னின்ன படைப்பாளர்கள் கூட்டணியாக இருக்கிறார்கள் என்றும், அந்தப் படைப்பாளரின் வாசகர்கள் இந்தப் படைப்பாளருக்கு எதிராக வரிந்து கட்டி நிற்கிறார்கள் என்றும் இலக்கிய உலகச் செய்திகள் அரசியலைவிட பரபரப்பாகப் பேசப்படுகிறது. அதுவும், டிஜிட்டல் மீடியாக்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவை வந்தபிறகு, எழுத்தாளர்கள் ஆசான்களாகவும், குருஜிகளாவும், மகான்களாகவும் தங்களை வெளிப்படுத்திக் கொண்டு, தங்களுக்குள்ள ஆதரவுக் குழுவை வைத்து மற்ற படைப்பாளர்கள் மீது வன்மத்தைக் கக்குவது மிக அதிகமாகிவிட்டது.
கவிஞரும் திரைப்படப்பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு அண்மையில் ஞானபீட விருது அறிவிக்கப்பட்டது. திரைப்பாடல்களுக்காக பல தேசிய விருதுகளை வாங்கியவர் அவர். கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதும் பெற்றவர். ஞானபீடம், நோபல் பரிசு என்பதெல்லாம் வைரமுத்துவின் பெருங்கனவு. கனவை நனவாக்கும் முயற்சிகளில் அவர் கெட்டிக்காரர். முந்தைய விருதுகள் எவ்விதம் அவரிடம் வந்ததோ, அதுபோலவே ஞானபீடத்தில் ஏறி அமர்வதற்கான சாகசங்களையும் கச்சிதமாக செய்து வந்தார். கடைசியில், அதில் ஏறி விட்டார்.
எந்தவொரு விருதும் அந்த விருதை நிறுவிய அரசு-அமைப்பு, விருதாளரைத் தேர்வு செய்யும் குழுவில் உள்ள உறுப்பினர்கள், அந்தக் குழுவுக்கு உள்ளும் புறமுமாக உள்ள அரசியல்-அழுத்தம் எனப் பல காரணங்களின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. இது ஆஸ்கர், நோபல் என எல்லாவற்றுக்கும் பொருந்தும். விருது பெறுபவர் அதற்குரிய தகுதியான படைப்பாளரா என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது. அவரைவிட இவர் சிறந்தவர்-இவரைவிட அவர் சிறந்தவர் என்பது அவரவர் பார்வையிலான மதிப்பீடு.
வைரமுத்துவின் படைப்பாற்றலுக்குத்தான் ஞானபீட விருது தரப்பட்டுள்ளது என்ற நிலையில், அதுகுறித்த விமர்சனங்களை நேர்மையாக முன்னிறுத்துவது இலக்கியத்திற்கு பயன் தரக்கூடியதாகும். ஆனால், தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் இதுபோன்ற விருதுகள் கிடைப்பதில்லையே என்ற ஆதங்கமும் பொறாமையும் கொண்டவர்கள், வைரமுத்துவுக்கு வழங்கப்பட்ட விருதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்தி, ஞானபீட அமைப்புக்கு அதனை அனுப்பியிருக்கிறார்கள். வைரமுத்து மீது பாலியல் புகார் உள்ளது என்கிறார்கள். இதில் உள்ள அரசியலை உணர்ந்து வைரமுத்துவுக்கு ஆதரவாக ஒரு தரப்பு வரிந்து கட்டி நிற்கிறது.
தகுதியுள்ள படைப்புகள் காலம் கடந்து நிற்கும். விருதுகளை வைத்து செய்யப்படும் அரசியலில் வயிற்றெரிச்சல்தான் மிச்சம்.(Online Tamil News)



