ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்றுக்கொண்டு நின்ற பழனிசாமிக்கு இன்று ரூ.50 லட்சம் கோடி சொத்து என்று சொல்கிறார் செங்கோட்டையன்.
தவெக சார்பில் கோபி செட்டிபாளையத்தில் போட்டியிடுகிறார் செங்கோட்டையன். இவருக்கு எதிராக அதிமுக சார்பில் பிரபு என்பவரை களமிறக்கி இருக்கிறார் எடப்பாடி. பிரச்சாரத்தில் எடப்பாடியும் செங்கோட்டையனும் ஒருவரை மாற்றி ஒருவர் திட்டிக்கொண்டு உண்மையை உளறிக்கொட்டுகின்றனர்.
பிரச்சாரத்தில் பேசிய செங்கோட்டையன், ‘’எங்கே இருந்து வந்தீர்கள் என்பது எனக்கு தெரியும் எடப்பாடி. நான் பார்க்கும் போதெல்லாம் ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்றுக்கொண்டு நிற்பார் பழனிசாமி. அவர் நான் உருவாக்குனேன். 79ல் இரண்டு கொலை நடந்தது. அண்ணன் தம்பி செய்தது. நானும் முத்துசாமியும் சேர்ந்து அந்த நெருக்கடியான நேரத்தில் அவரை காப்பாற்றினோம். அப்படி இருந்தும் அவர் திருந்தினபாடில்ல.

பவானி பகுதியில் 2 கோடி ரூபாயில் அட்டை பேக்டரி. அந்தியூரில் இருந்து அம்மாபேட்டை செல்லும் 3ஆயிரம் கோடியில் தொழிற்சாலை. இங்கேயே 5 ஆயிரம் கோடி ரூபாய் இருக்குது. 50 லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்தும் உங்க ஆசை தீரவில்லை.
நான் முதலமைச்சர் ஆகி இருக்க வேண்டியது. ராத்திரி வரைக்கும் நான் தான் முதலமைச்சர். காத்தாலதான் மாறிப்போச்சு. பொட்டி அந்த ஆளு கையில இருந்துச்சு. என்கிட்ட பொட்டி இல்ல. காலையில சசிகலா கேட்டாங்க. சரி, பரவாயில்ல, யாரோ ஒருத்தர் இருந்துட்டு போகட்டும். கட்சி உடையாம இருந்தா சரி என்று சொல்லிவிட்டேன்.

காத்தால சசிகலா சிறைக்கு போகும் போது, நீங்கதான் முதலமைச்சர் வேட்பாளர். செங்கோட்டையனும் சொல்லிட்டார் என்று சொல்லி எடப்பாடியின் தோளை பிடிச்சார். திடீர்னு பார்த்தா மலைப்பாம்பு மாதிரி ஒருத்தர் வந்து கீழே விழுந்தார். விழுந்து தரையில நீந்திக்கிட்டே வந்தார். கடலுக்கு அருகே தானே ரிசார்ட்டுல (கூவத்தூர்) இருக்கோம். என்னடா மலைப்பாம்பு வந்துட்டான்னு நானே எழுந்திருச்சிட்டேன். அன்னைக்கு காலை பிடிச்சு பதவி வாங்கிட்டு. இன்னைக்கு அந்தம்மாவை இவர் யார் என்று கேட்கிறார்’’ என்று எடப்பாடியை மிகக்கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தில், ஆத்திரப்பட்டு ‘’சொங்கோட்டையா…’’ என்று கர்ஜித்தார். செங்கோட்டையன் சொன்ன சொத்துக்கள் என் சம்பந்திக்கு சொந்தமானது என்று விளக்கம் கொடுத்தார்.



